பாட்டாளிகளின்
வாழ்வியல் முன்னேற்றம் என்பது அன்றாடங்காட்சியாகவே ஆகிவிடுமோ என்று அச்சம் கொள்ளும்
அளவுக்கு இன்றும் நிலைமை இருப்பது வருத்ததை ஏற்படுத்துகிறது. நாட்டில் பல தோட்டத் தொழிலாளர்கள்
சொந்த வீட்டுக்காக போராடிக்கொண்டிருக்கும் வேளையில் கேமரன்மலை விவசாயிகளும் சொந்த வீடு
வாங்க முடியாத அவர்களின் பிரச்னையை தொடர்ந்து பேசி வருகின்றன.
காலகாலமாக
விவசாயிகளாக இருக்கும் அவர்கள் தனக்கென ஒரு சொந்த வீடு வாங்கும் கனவு இதுவரை நிறைவேறாமல்
இருப்பது ஏமாற்றத்தை அளிப்பதாக கூறினர். பாமர மக்களான இந்த விவசாய பாட்டாளிகள் பலர்
பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால், அவர்கலின் பொருளாதார நிலை
அவர்களை ஒரு சொந்த வீடு வாங்குவதற்கு வசதியளிக்கவில்லை.
கேமரன்மலையில்
சராசரியாக ஒரு வீட்டின் விலை 2 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளதால் சாதாரணமாக ஒரு பாட்டாளியால்
வீடு வாங்கமுடியாமல் இருக்கிறது. 1970 ஆம் ஆண்டில் பாட்டாளி மக்கள் மற்றும் விவசாயிகளுக்காக
அப்போதைய மாநில அரசாங்கம் மலிவு விலை வீடுகளைக் கட்டிக் கொடுத்தது. குறைந்த வருமானம்
கொண்ட அவர்களுக்கு வசதியாக குறைந்த அளவில் வாடகையை நிர்ணயித்து 30 ஆண்டுகளுக்குப் பின்
அவ்வீட்டை வாங்கவும் சலுகையளித்தது.
ஆனால்,
கடந்த 50 ஆண்டுகளாக கேமரன் மலையில் பாட்டாளிகளுக்காக மலிவு விலை வீடுகள் கட்டப்படவில்லை.
கேமரன்மலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறைந்த வருமானம் பெறும் மக்கள் இருக்கின்றனர்.
அவர்களால் சொந்த வீடு வாங்குவது ஒரு கனவாகவே இருக்கிறது. அந்தக் கனவு கனவாகவே ஆகிவிடுமோ
என விவசாயப் பாட்டாளிகள் அச்சம் கொள்கின்றனர்.
இதனிடையே
கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி பி.எஸ்.எம் கட்சியின் தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம்,
மனித உரிமை ஆணையமான சுவாராமைச் சேர்ந்த சுரேஸ் குமார் ஆகியோரின் உதவியுடன், புத்ராஜெயாவிலுள்ள தேசிய வீடமைப்பு இலாகாவின் இயக்குநர்
ஜெயசீலனை கேமரன்மலை பாட்டாளிகளின் பிரதிநிதிகள் சந்திப்பு நடத்தினர். 1,500 வெள்ளிக்கு
குறைவான மாதச் சம்பளம் பெறும் கேமரன்மலை விவசாயிகளுக்கு பிபிஆர் மலிவு விலை வீடுகளை
அரசாங்கம் கட்டித்தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
உணவுக்கு
ஆதாரமாக விளங்கும் விவசாயிகளின் வாழ்வியல் போராட்டம் வளர்ந்த நாடு என சொல்லிக்கொள்ளும்
நம் நாட்டில் மிக மோசமாக போய்கொண்டிருப்பது வருத்ததிற்குறிய ஒன்றாகும்.