Tuesday, December 8, 2020

கெட்கோ வாழ் மக்களின் நெடுங்கால போராட்டமும் - நம்பிக்கை கூட்டணி இழைத்த துரோகமும்!!


கெட்கோ
  வாழ் மக்கள் தொடர்ந்து பல தரப்பினரால் ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர். 2018- ஆண்டு,  இந்த ஏமாற்றங்கள் நம்பிக்கை கூட்டணியால் ஒரு முடிவுக்கு வரும் என அவர்கள் நம்பினர். மார்க்ஸ் சொன்னதுபோல வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்கிறது; முதலில் சோகம் இரண்டாவது கேலிக்கூத்து என்பது இதற்கு அப்படியே பொருந்தும்.

கடந்த நவம்பர் 25 ஆம் திகதி டிஏபி மற்றும் 29 ஆம் திகதி மாண்புமிகு வீரப்பன் வெளியிட்ட இரண்டு அறிக்கைகளையும் தமிழ் ஊடகங்கள்  வெளியிட்டன. அவ்வறிக்கை பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது. கெட்கோ வாழ் மக்களுக்கு 4 ஏக்கர் மற்றும் 2 ஏக்கர் நிலம் மட்டுமே வழங்கப்படும் என்றும் இதுவே இறுதியான முடிவு எனவும் மாண்புமிகு வீரப்பன் தெரிவித்துள்ளார். இது இதுவரை நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் குறிப்பாக நெகிரி செம்பிலனின்  தலைவர்கள் எடுத்த எல்லா நடவடிக்கைகளுக்கும், அறிக்கைகளுக்கும், வாக்குகளுக்கும் எதிரானதாக அமைந்துள்ளது.

மஇகா தலைவர்களுக்கு அரசியல் களமாட இது ஒரு வாய்ப்பாக அமைந்த காரணத்தால் அவர்கள் தொடர்ந்து வீரப்பன் மற்றும் அவரது சகாக்களான மாண்புமிகுகள் ரவி முனுசாமி, குணசேகரன் மற்றும் அருண்குமார் ஆகியோரைத் தாக்கி வருகின்றனர். முன்பு இந்த நம்பிக்கை கூட்டணி  தலைவர்கள் எட்டு ஏக்கர் நிலத்திற்காக போராடும் மக்களின் பக்கம் நின்றனர். அந்த நேரத்தில் பாரிசான் நேசனல் மற்றும் மஇகா  அப்பொழுது ஆட்சியில் இருந்த பிஎன் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 4 ஏக்கர் நிலத்தை ஏற்றுக்கொள்ள ஒப்புக் கொண்டிருந்தனர். 8 ஏக்கர் பெற்ற மக்களுக்கும்  4 ஏக்கர் மக்களுக்கும்  இடையிலான இந்த மோதலால் பல கைதுகள், சண்டைகள், சொத்து இழப்புகள் மற்றும் இன ரீதியான பிரச்சனைகள் கூட ஏற்பட்டுள்ளன.

8 ஏக்கர் வழங்குவதாக தான் இதுவரை சொன்னதே இல்லை என்று வீரப்பன் கூறுவது தப்பித்துக்கொள்வதற்காக சொல்லப்படும் பலவீனமான பொய்யே இன்றி வேறெதுவும்மில்லை. தற்போதைய சூழ்நிலைகளால்  8 ஏக்கர் நிலம் சாத்தியமில்லை என்று அவர் சொல்லியிருக்கலாம். அதற்காக மன்னிப்பு கேட்டிருக்கலாம். ஆனால் அதை செய்யாமல் பொய்யைச் சொல்கிறார்.  ஆட்சியை கைப்பற்றிய காலம் தொட்டே இந்த கட்சியினர்களின் ஆணவம் பெரும் சிக்கலாக உள்ளது. இந்த அறிக்கை குறித்த விவரங்களை கெட்கோ  வாழ் மக்கள் பத்திரிக்கைகளிலும் சமூக ஊடகங்கள் மூலமும்தான் அறிந்துகொண்டுள்ளனர். இது இன்னும் மோசமான நிலை. இந்த பொய்களை மறுப்பதே இந்த கட்டுரையின் நோக்கமாகும் .

மே 9 2018 இல், 60 ஆண்டுகளாக இருந்த பி.என்- அம்னோ ஆட்சியை கவிழ்த்து பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி வரலாறு காணாத வெற்றியை அடைந்தது. நெகிரி செம்பிலானிலும் நம்பிக்கை கூட்டணி மாபெரும் வெற்றி கண்டு  25 மே 2018 இல் ஆட்சியை நிறுவியது. அந்த வெற்றி கெட்கோ  வாழ் மக்களுக்கு ஒப்பற்ற மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்தது. ஏனெனில் முந்தைய முதலமைச்சர் முஹமட் ஹசன் கெட்கோ  வாழ் மக்களுக்கு  4 ஏக்கரும் நிலத்தை வாங்கியவர்களுக்கு 2 ஏக்கரும் வழங்கப்படும் என்று கூறியதை நம்பிக்கை கூட்டணி அரசு எதிர்த்து அனைவருக்கும் 8 ஏக்கர் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக நின்றது.



கெட்கோ மக்கள், நம்பிக்கை கூட்டணி தலைவர்களும் தற்போது அங்கு எம்.பியாக  இருப்பவரும் சேர்ந்து பி.என்  கெட்கோ  நில பிரச்சனைக்கு அளித்த தீர்வை எதிர்த்ததை இன்றளவும் தெளிவாக நினைவில் வைத்துள்ளனர். இந்த நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் கெட்கோ வாழ் மக்களோடு பல ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டதிற்கும் அதனால் அவர்கள் கைது செய்யப்பட்டதிற்கும் பல ஆதாரங்கள் கண் முன்னே கிடக்கிறது.அதை அவ்வளவு சுலபமாக அவர்களால் அழித்திட முடியாது.

இந்த நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் ஆட்சியில் அமர்ந்ததும் கெட்கோ மக்களை ஏமாற்றியது மட்டுமில்லாமல் மாட் ஹசன் அரசாங்கத்தால் பல குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தப்பட்டனர். மாட் ஹசன் அரசாங்கம் ஊழலை கடைபிடிப்பதுடன் லோட்டஸ் குழுவின் துணை நிறுவனமான லோட்டஸ் ஹோல்டிங்ஸுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

நெகிரி செம்பிலான்னில் நம்பிக்கை கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த மகிழ்ச்சியை கொண்டாட கெட்கோ வாழ் மக்கள் மாநில அரசு அலுவலகத்திற்கு வெளியே தங்கள் முதல் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்தனர். இது 1 ஜூன் 2018 அன்று அதாவது நம்பிக்கை கூட்டணி ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்திற்குள் நடைபெற்றது.அவர்கள் நம்பிக்கை கூட்டணி  தலைவர்களின் புகைப்படங்களுடன் ஒரு பெரிய பேனரை எடுத்துச் சென்றனர்.

அன்று அவர்கள் அளித்த அறிக்கையில்,  தங்கள் நிலத்தில் நடைபெறும்  அனைத்து பதிவு நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் என  குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அவர்கள் பி.என் ஆட்சியில் நடந்த ஊழல்களையும் அவர்களின் அலட்சியதன்மையையும் அம்பலப்படுத்த வேண்டும் என விரும்பினர்.  முறையாக ஏலம் விடாமல் சந்தை விலைக்குக் கீழே லோட்டஸ் ஹோல்டிங்ஸுக்கு நிலத்தை விற்பனை செய்வது மற்றும் ரப்பர் மரங்களுக்கான ஒப்பந்த நடவடிக்கையில் இருந்த சிக்கல் போன்ற பல பிரச்சனைகள்  இருந்தன. நம்பிக்கை கூட்டணி ஆட்சியில் அந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காணப்படும் என நம்பப்பட்டது. மேலும், டாக்டர் மகாதீர் அவர்களால் மூத்த கவுன்சிலாக நியமிக்கப்பட்டவர்களில் ஒருவரான பேராசிரியர் ஜோமோ 1MDB போன்ற பல ஊழல்கள் நடந்துள்ளது அதில் கெட்கோவும் ஒன்று என குறிப்பிட்டிருந்தார்.

 

முதல் சந்திப்பும் முதல் வாக்குறுதியும்

பெரும்பாலான கெட்கோ வாழ் மக்களும் அவர்களது வழக்கறிஞர் ஆர். கெங்கதரன்னும் நம்பிக்கை கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்னும் மாநிலக் கூட்டத்திற்கு செல்லும் வாயில் மூடப்பட்டிருப்பதைக் கண்டு அதிருப்தி கொண்டிருந்தனர். சில நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் பி.எஸ்.எம் மக்களைத் தூண்டுவதை கண்டு அதிகாரத்திற்கு வந்த முதல் வாரத்திலேயே இவ்வளவு பெரிய கோரிக்கையை வைப்பது நியாயமற்றது என குற்றம் சாட்டினர். ஆயினும், கூட்டத்திற்குப் பிறகு, மாநில அரசு கெட்கோ செயற்குழுவை சந்திக்க ரவி, வீரப்பன், அருள் குமார் மற்றும் குணா ஆகிய நான்கு இந்திய பி.எச். தலைவர்களை நியமித்தது.



8 ஏக்கர் நிலத்தை கோரும் கெட்கோ செயற்குழுவை பிரதிநிதித்து வழக்கறிஞர் ஆர். கெங்காதரன் கலந்துக்கொண்டார். வேறு தரப்புகளின் மீது பலி போட காரணங்களை அள்ளி வீச புதிய அரசு தயாராக இருக்கும் காரணத்தால் பி.எஸ்.எம் அந்த அழைப்பை கடுமையாக புறக்கணித்தது. அந்த கூட்டத்தில்  கெட்கோ வாழ் மக்களுக்கும் அவர்களது வழக்கறிஞர் ஆர். கெங்காதரன்னுக்கும் முன்பு கூறியபடியே 8 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என நம்பிக்கை கூட்டணி தலைவர்களால் மறுமுறை வாக்குறுதி அளிக்கப்பட்டது .பெரும் மகிழ்ச்சி அடைந்த கெட்கோ வாழ் மக்கள் பகாங்  எல்லைக்கு அருகில் அமைந்த  ஜெம்போலில் உள்ள கெட்கோவிற்கு வந்து அங்கு வசிக்கும் மக்களுக்கு  நேரடியாக விளக்குமாறு அழைப்பு விடுத்தனர்.

உண்மையான வாக்குறுதி

11 ஜூலை 2019 அன்று, 3 நம்பிக்கை கூட்டணி  தலைவர்கள் மாண்புமிகு குணா, ரவி, வீரப்பன் ஆகியோர்  கெட்கோ வாழ் மக்களுக்கு  8 ஏக்கர் நிலத்தையும், வாங்கியவர்களுக்கு  4 ஏக்கர் நிலத்தையும் மாநில அரசு வழங்கும் என்று கூறினர். மாண்புமிகு குணா மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார். இந்தப் பிரச்சினை 31 ஆகஸ்ட் 2019க்குள் தீர்க்கப்படும் என்றார், அதே நேரத்தில் வீரப்பனும் ரவியும் மிகவும் எச்சரிக்கையாக 2019 ஆண்டின்  இறுதிக்குள் இந்த பிரச்சினையை தீர்ப்போம் என்று கூறினர்.

உண்மையிலேயே இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுமா என்று நான் கெட்கோ வாழ் மக்களை கேட்கும்போதெல்லாம் அவர்கள் மேற்கோள் காட்டியது இந்த மூன்று தலைவர்களின் பொது உறுதிமொழியைதான்.  8 ஏக்கர் வழங்கப்படும் என்று இவர்கள் கூறியதின் மீது நம்பிக்கை தன்மை உருவாக நான் ஒரு சட்டரீதியான பிரகடன் (SD) ஒன்றை செய்யுமாறு கூறினேன். இப்போது எங்களிடம் ஒன்றல்ல, கூட்டத்தில் கலந்துக்கொண்ட 30 க்கும் மேற்பட்ட குடிமக்களின் பிரகடனங்கள் உள்ளன. இப்போது இந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் இதைச் சொல்லவில்லை என்று கூறி ஒரு பிரகடனத்தில்  கையெழுத்திடுவார்களா?

 



வீரப்பன் இந்த வாக்குறுதியை  மாநில கூட்டத்தில் மீண்டும் கூறினாரா?

தமிழ் நாளேடுகளான மலேசியா நண்பன் மற்றும் மக்கள் ஓசையில் 26 செப்டம்பர் 2018 அன்று மாண்புமிகு வீரப்பன் அவர்கள் மாநில கூட்டத்தில் குடியேறியவர்களுக்கு 4 ஏக்கர் மற்றும்  வாங்கியர்களுக்கு 2 ஏக்கர் என்பதை முன்பே ஒப்புக்கொண்ட 170 பேருக்கு அவ்வாறே வழங்கப்படும் எனவும் 8 ஏக்கரை கோரும் பிற மக்களுக்கு நிச்சயமாக வாக்குறுதி நிறைவேற்றப்படும் எனவும் உறுதியளித்ததாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

பி.எஸ்.எம் பலமுறை இந்த வாக்குறுதிக்கான அதிகாரப்பூர்வ அறிக்கையை பெற முயற்சித்தது. ஆனால் நம்பிக்கை கூட்டணியின்  "வெளிப்படையான" அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் அதை மறுத்துவிட்டது. அவர்கள் முதலில் எங்களை அறிக்கையை தயார் செய்ய சொன்னார்கள். நாங்கள் தயார் செய்த பிறகு , நாங்கள் அதைக்கொண்டு என்ன செய்ய விரும்புகிறோம் என்பதை வினவினர். பாராளுமன்ற அறிக்கைகள் கூட பொதுமக்களால் எளிதில் பெறப்படும்போது அவர்கள் பாதுகாக்க விரும்பும் ரகசியம்தான் என்ன? மாநிலத்தின்  கூட்டங்கள் மற்றும் விவாதங்கள் ஏன் பொதுவில் நடைபெற கூடாது.

2018ஆம் ஆண்டு நிறைவேறாத வாக்குறுதிகளுடன் முடிவுற்றது.

13 அக்டோபர் 2018 அன்று, ஒரு இடைத்தேர்தல் பி.கே.ஆரால் கட்டடாயப் படுத்தப்பட்டு அதில் அன்வர் இப்ராஹிம் வேட்பாளராக நின்று வெற்றிபெற்றார். பிரச்சார காலத்தில், சில பி.கே.ஆர் ஆதரவாளர்கள் கெட்கோ குடியேற்றவாசிகளை நம்பிக்கை கூட்டணிக்காக பிரச்சாரம் செய்ய அழைத்து வந்தனர். மேலும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கெட்கோ மக்களுக்கு 8 ஏக்கர் வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்காக பி.என் கட்சியை சாடினர்.

2018 முடிவடைவதற்குள் கெட்கோ பிரச்சனைக்குநம்பிக்கை  கூட்டணியால்  தீர்வு கொண்டுவர முடியாததை போல் தோன்றியது. அதை தொடர்ந்து 29 நவம்பர் 2018 அன்று நானும் பி.எஸ். எம் மாநிலத் தலைவர் காந்தி மற்றும் 8 ஏக்கர் கேட்கும் கெட்கோ குழுவின் செயலாளர் ஜோன் கண்டியூஸ் ஆகியோருடன் சேர்ந்து மாண்புமிகு வீரப்பனுடன் ஒரு சந்திப்பை மேற்கொண்டோம். குறிப்பிட்ட காலத்திற்குள் வாக்குறுதி நிறைவேற்ற முடியாமல் போனால் அதற்கான விளக்க கடிதம் ஒன்றை கெட்கோ வாழ் மக்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டோம். அவர் முதலில் 4 ஏக்கர் மற்றும் 2 ஏக்கர் நிலத்தை பெறுவோருக்கு  நிலங்களை வழங்கிய பின்னர் 8 ஏக்கர் நிலங்களை கோருபவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் அவர் நிலத்தை வாங்கியவர்களுக்கு 8 ஏக்கர் அளிக்கப்பட வேண்டும் என கேட்பது நியாயமற்றது என்றார். நாங்கள் அதை ஆமோதித்தோம். குடியேறியவர்களுக்கும் 8 ஏக்கரும் வாங்கியவர்களுக்கு 4 ஏக்கரும் அளிப்பது சரியானதாக இருக்கும் என நாங்கள் ஒப்புக்கொண்டோம். நாங்கள் அங்கிருந்து புறப்படுவதற்கு முன் முதலில் சிலருக்கு 4 மற்றும் 2 ஏக்கர் நிலம் வழங்கிவிட்டு பிறகு சிலருக்கு 8 மற்றும் 4 ஏக்கர் வழங்குவதால்  மக்களுக்கிடையில் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதே என்று கேட்டோம். அதற்கு அவர் 4 மற்றும் 2 ஏக்கர் நிலத்தை பெறுபவர்கள் பி.என் ஆட்சி காலத்தில் அவர்களுடன் ஒப்புக்கொண்டது. இனி அதில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை என கூறினார். எனவே இந்த கூட்டத்தில், வீரப்பனின் நிலைப்பாடு என்னவென்றால், அவர்கள் முதல் குழுவிற்கு நிலத்தை வழங்கிய பின்னர்  வாக்குறுதியளித்தபடி இரண்டாவது குழுவிற்கு 8 ஏக்கர்களைப் பெற முயற்சிப்பார்கள். இந்த ஆண்டின் இறுதிக்குள் அவர்களால் வாக்குறுதியைக் கடைப்பிடிக்க முடியாவிட்டால் அதனை எங்களிடம் தெரிவிப்பார் என்றும் அவர் உறுதியளித்தார். ஆனால் அதற்கான காலத்தை அவர்களால் நிர்ணயிக்க முடியவில்லை.

அடுத்தகட்ட போராட்டமும் எம்.பி உடனான சந்திப்பும்

12பிப்ரவரி 2019 அன்று100 க்கும் மேற்பட்ட குடியேறிகள் ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்து, நெகிரி செம்பிலான் மாநில செயலக அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் அமர்ந்தனர். 6 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தபின், நெகிரி செம்பிலான் எம்பியுடன் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்படும் என்று அவர்களுக்கு இறுதியாக உறுதியளிக்கப்பட்டது, மேலும் வீரப்பன் அவர்களுக்கு ஒரு கடிதத்தை வழங்கினார். 20 பிப்ரவரி 2019அன்று டத்தோ 'செரி ஹாஜி அமினுதீன் பின் ஹருனுடனான சந்திப்புக்கு 10 கெட்கோ வாழ் மக்கள் அழைக்கப்பட்டனர். அவர்கள் பல பிரச்சினைகளை கேள்வி எழுப்பினர், குறிப்பாக ரப்பர் மரங்களுக்கான   டெண்டர் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது வினவினர். இந்த ரப்பர் மரங்கள் கெட்கோ மக்களின் வியர்வையால் நடப்பட்டது. அவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என கேட்டனர்.

அப்போதைய மக்களிடையே வறுமையை ஒழிப்பதற்காக இந்த திட்டம்கொண்டுவரப்பட்டதால்  மீதமுள்ள நிலத்தை தாமரையிலிருந்து மீட்க மாநில அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். எம்.பி இது குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க 10 நாள் கால அவகாசம் வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

7 மார்ச் 2019 அன்று, மாண்புமிகு ரவி மீண்டும் கெட்கோ குழு தலைவருடனும்  எம்பியுடனும்  ஒரு சந்திப்பைத் மேற் கொண்டார் . முஹமட் ஹசான்  வெற்றியை நீதிமன்றம் ரத்து செய்தபோது ரந்தாவ்  இருக்கை காலியாக இருந்ததை அடுத்து மாநிலம் மீண்டும் ஒரு இடைத்தேர்தலை எதிர்கொண்டது. அதனால் இந்த நேரத்தில் போராட்டங்கள் நடைபெற்றால் அது மாநில அரசுக்கு எதிராக முடியும் என்பதால் போராட்டங்கள் நடைபெறாமல் தடுக்கத்தான் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது என மக்கள் நம்பினர்.

அந்தகூட்டத்தில்  எம்.பி,முந்தைய பி.என் அரசு  நிலம் தருவதாக உறுதியளித்தது ஒரு அரசியல் விளையாட்டு என்று கூறினார். அதுபோல் தன் நடைபெறாது என உறுதியளித்தார். 31 ஆகஸ்ட் 2019க்குள் 4 மற்றும் 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் எனவும் அதை தொடர்ந்து 8 ஏக்கர் நிலம் வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.எம்பி மக்களிடம் பொறுமையாக இருக்குமாறும்இந்த   பிரச்சினையைத் தீர்க்க அவகாசம் கொடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார். மார்ச் 30 ஆம் திகதி முந்தைய எம்பி மேட் ஹாசன் மீது கெட்கோ ஊழல் வழக்கு பதிவு செய்ய சொல்லி நம்பிக்கை கூட்டணி கெட்கோ மக்களின் ஆதரவை நாடியது. ஆனால், ரந்தாவ் இடைதேர்தலுக்காக நம்பிக்கை கூட்டணி,முகமது ஹசனுக்கு எதிராக வழக்கு பதிய கெட்கோ மக்களை பயன்படுத்துகிறார்கள்என்பதை   நாங்கள் உணர்ந்தோம். அதனால் பி.எஸ்.எம் இந்த நடவடிக்கையிலிருந்து விலகி கொண்டது.

ஆயினும்கூட, நம்பிக்கை கூட்டணி  உறுப்பினர்களின் ஊக்கத்தோடு, கெட்கோ மக்கள்  28 மார்ச் 2019 அன்று அபுஹாசனுக்கு எதிராக வழக்கு  பதிவு செய்தனர்.இந்த வழக்கு சுமார் 40 கெட்கோ வாழ் மக்களால்  செப்டம்பர் 2 காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.


முதல் கட்டம் வழங்கப்பட்ட நிலங்கள்

முதலில் 4 மற்றும் 2 ஏக்கர் நிலங்கள் வழங்கப்படும் பின்னர் 8 ஏக்கர் நிலங்கள் வழங்கப்படும் என்பதையே தாரக மந்திரமாக கூறி வந்த நம்பிக்கை கூட்டணி அரசு இறுதியாக 4 மற்றும் 2 ஏக்கர் நிலங்களை 29 நவம்பர் 2019 அன்று மக்களுக்கு வழங்கியது. அப்போதும் கூட 8 மற்றும் 4 ஏக்கர் நிலங்கள் வழங்கப்படுவதற்கான காலம் குறிக்கப்படவில்லை.ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டன.

எண்கள் சமமாக இல்லை

8 ஏக்கர் நிலத்திற்கு  போராடி வந்த மக்கள்  அமைதியற்றவர்களாக மாறத் தொடங்கினர். ஏனென்றால், லோட்டஸ் நிறுவனத்திடமிருந்து கூடுதல் நிலம் பெறப்படாவிட்டால், 8 ஏக்கர் நிலத்தை கேட்கும் மக்களுக்கு  நம்பிக்கை கூட்டணி  அரசாங்கத்தால் அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்பது அனைவரும் அறிந்த  உண்மை.

எங்கள் கணக்கீட்டின் அடிப்படையில், இரண்டாவது தொகுதிக்கு 888 ஏக்கர் நிலம் தேவைப்படும், இதில் 82 அசல் குடியேறிகள் மற்றும் 56 வாங்குபவர்கள் முறையே 8 மற்றும் 4 ஏக்கர் பெறுவார்கள் .தாமரை மாநில அரசுக்கு 1206 ஏக்கர் கொடுத்துள்ளதால், இதில் 594 ஏக்கர் முதல் தொகுதிக்கு வழங்கப்பட்டது, எனவே நில பற்றாக்குறை இருக்கும் என்றும், வாக்குறுதியை நிறைவேற்ற கூடுதலாக 275 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்றும் நாங்கள் மதிப்பிட்டோம்.

கூடுதல் நிலம் இருக்கிறதா என்பது ஒரு பிரச்சனையாக இருக்கக்கூடாது, ஏனெனில் தாமரை கையகப்படுத்திய நிலத்தின் அசல் அளவு 4,700 ஏக்கர்.இதை முன்னிலைப்படுத்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை 14 ஜனவரி  2020அன்று கோலாலம்பூரில்  ஏற்பாடு செய்தோம்.இதற்கு முன்னர் எங்கள் நண்பர்களாக  இருந்த நம்பிக்கை கூட்டணி தலைவர்கள், குறைவான ஒத்துழைப்பையே நல்கினர். இறுதியாக மந்திரி  பெசாருக்கு 12 ஜூன் 2020 அன்று  ஒரு கடிதம் எழுதினோம், முந்தைய வாக்குறுதிகள் மற்றும் முந்தைய விவாதங்கள் அனைத்தையும் மீண்டும் வலியுறுத்தினோம். கூடுதல் நிலங்களை மாநில அரசு கையகப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் நாங்கள் எடுத்துரைத்தோம்.

வீரப்பன் தொடர்ந்து  மக்களை கூட்டத்திற்கு அழைப்பார் என்று கூறி வருகிறார். பின்னர் ஒரு கட்டத்தில்,  கெட்கோ வாழ் மக்கள்  தாங்கள் அசல் குடியேறிகள் என்பதை நிரூபிக்க ஜெம்போலில் முகப்பை திறப்பார்கள் என்று சொன்னார்கள்.  ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இறுதியாக நடந்தது பி. என் அரசு அளித்த அதே 4 மற்றும் 2 ஏக்கர் வாக்குறுதியையே தருவதாக கூறி மக்களை பெரும் ஏமாற்றத்திற்கு நம்பிக்கை கூட்டணி  ஆளாக்கியது.நம்பிக்கை கூட்டணி அரசு முற்றிலும் நம்பகத்தன்மையற்றது  இறுதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.அவர்கள் நின்ற போராட்டத்திற்கு எதிராக அவர்கள் சென்றுள்ளனர். மேலும் இதை நியாயப்படுத்துகிறார்கள். வீரப்பனை மட்டும் இதில் குற்றம் சாட்டிவிடமுடியாது. மற்ற நம்பிக்கை கூட்டணி தலைவர்களும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இந்த விஷயத்தை ஆராயும்போது நமக்கு புரிவது , கெட்கோ மக்களுக்கு தற்போது நிகழ்ந்திருக்கும் ஏமாற்றம் 40 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டதை விட கொடுமையானது.ஆரம்பத்தில் 10 ஏக்கராக இருந்த நிலம் பின்னர்  8 ஆக குறைக்கப்பட்டு , இப்போது நம்பிக்கை கூட்டணி  அதை வெற்றிகரமாக 4 ஆக குறைத்துள்ளது.

பின்னணி

கெட்கோ என்பது தி கிரேட் அலோனியனர்ஸ் டிரேடிங் கார்ப்பரேஷன் ( The Great Alonioners Trading Corporation Bhd). 1977 ஆம் ஆண்டில்அதன் உறுப்பினர்களுக்கான நில மேம்பாட்டுத் திட்டத்தை எளிதாக்க தேசிய தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தால் (NUPW ) இணைக்கப்பட்டது.இது ஒரு ஃபெல்டா (FELDA )திட்டத்தைப் போன்றதுதான் . ஆனால் ஃபெல்டா (FELDA ) திட்டதில் பங்கேற்கும் பெரும்பான்மையினர் மலாய்க்காரர்கள் ஆனால் கெட்கோவில் பங்கெடுத்தவர்கள் அதிகமானோர் இந்தியர்கள். ஆகவே மலேசியஇந்தியர்களின்  மிக முக்கியமான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று.4,700 ஏக்கர் நிலத்தை உள்ளடக்கிய இந்த குடியேற்றம் நெகிரி செம்பிலான் அரசால் வழங்கப்பட்டது. இது நெகிரி செம்பிலானில் பிறந்து வளர்ந்த மற்றும் தேசிய தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொது செயலாளருமாக இருந்த பி.பி. நாராயணன் மற்றும் அப்போது மாநில முதல்வராக இருந்த இசா சமாட்டுடன் நடந்த ஒப்பந்தமாகும்.தேசிய தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் அதன் உறுப்பினர்களை நாடு முழுவதும் இந்த நிலத்திற்கு அணிதிரட்டியது, அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்குவதாக உறுதியளித்தது.ஒவ்வொருவரும் தலா RM7,600 செலுத்த வேண்டியிருந்தது. அப்பொழுது இந்த பணம் மிகப்பெரிய தொகையாகும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீட்டுவசதிக்கு ஒரு ஏக்கர் நிலமும் கரும்பு நடவு செய்வதற்கு பத்து ஏக்கரும் வழங்கப்பட்டு 66 வருட குத்தகை வழங்கப்பட்டது.

மொத்தம் 430 குடியேறியவர்களில்; 280 குடியேறியவர்கள் இந்தியர்கள், 120 மலாய்க்காரர்கள் மற்றும் 30 சீனர்கள் ஆவர். கம்புங் கெட்கோ என அழைக்கப்படும் இவ்விடம் ஜெம்போல், நெகிரிசெம்பிலான்   அருகே அமைந்துள்ளது. இது பஹாங் எல்லையிலிருந்து 60 கிலோமீட்டர் தெற்கே அமைந்துள்ள ஒரு கிராமப்புற இடமாகும்.

1980 களின் முற்பகுதியில் கரும்பு விலை  சரிந்தது. கெட்கோ  பின்னர் ரப்பர் மரங்களை நடவு செய்வதற்கும் செலவை ஈடுசெய்வதற்கும் ஒரு புதிய ஒப்பந்தம் கையெழுத்திட்டது. ஒவ்வொரு குடியேறியவர்களும் 2 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க வேண்டும், இது இழப்புகளைத் தீர்க்கவும், அங்கு ரப்பர் மரங்களை மீண்டும் நடவு செய்யவும் பயன்படும். ஆகவே 10 ஏக்கர் 8 ஏக்கராக மாறியது.தவறான நிர்வாகம் தொடர்ந்து கேட்கோவை மூழ்கடித்தது, அது 1983 ஆம் ஆண்டில் திவாலானதாக அறிவிக்கப்பட்டது.தற்போது சி.ஐ.எம்.பி (CIMB) என அழைக்கப்படும் வங்கியிடம் கடன்களைத் தீர்க்கத் தவறிவிட்டது.பின்னர் நிலம் பெங்குருசன் டனஹார்த்தா நேஷனல் பெர்ஹாட் (Danaharta) விடம்  ஒப்படைக்கப்பட்டது.1996 இல் சிங்கம் மற்றும் யோங் லிக்விடேட்டர்கள் (liquidators) அதனை பெற்றனர்

அசல் ஒப்பந்தத்தில், நிலம் விற்பனைக்கு வந்தால் அதை வாங்குவதற்கான முதல் வாய்ப்பை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று இருந்தது . ஆனால் பின்னர் அக்கூற்று மாற்றப்பட்டது. அதற்கு காரணம் அந்த நிலத்தை திடீரென லிக்விடேட்டர்களால் விற்கப்பட்டது.குடியேறியவர்கள் தாங்கள் நிலத்தை வாங்கத் தயாராக இருந்தபோதிலும் லோட்டஸ் ஹோல்டிங்ஸ் அந்த நிலத்தை சந்தை விலைக்கு கீழே பின் கதவு வழியாக பெற்றது.

செப்டம்பர் 2017 இல் தாமரையின் 2 இயக்குநர்கள் கெட்கோ  நிலம் தொடர்பாக   MACC இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

லோட்டஸ் நிலத்தை லிக்விடேட்டரிடமிருந்து 16 மில்லியனுக்கு (ஏக்கருக்கு RM 4,000) மட்டுமே வாங்கியது. அங்கு நடப்பட்ட ரப்பர் மரங்களின் மதிப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளாத நிலத்தின் அசல் விலை இதுவாகும்.நிலத்தில் உள்ள ரப்பர் மரத்தின் மதிப்பு ஒரு ஏக்கருக்குRM 6000.அதனால்தான்  தாமரைக்கும் குடியேறியவர்களுக்கும் இடையிலான முக்கிய போர்க்களமாக ரப்பர் மாறிவிட்டது. குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம்.

2017 ஆம் ஆண்டு ஜூலை 18 மற்றும் ஜூலை 24 ஆகிய தேதிகளில் 28 பேரும் அதை தொடர்ந்து கெட்கோவை சேர்ந்த 30 பேரும் கைது செய்யப்பட்டு, சங்கிலியால் பிணைக்கப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டனர்.அவர்கள் ஒன்றாக சங்கிலியால் பிணைக்கப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட வீடியோ பொதுமக்களிடையே அனுதாபம், கோபம் மற்றும் எதிர்ப்பை பெருமளவில் வெளிப்படுத்தியது.அந்த புகைப்படங்கள் நவீன கால அடிமைத்தனத்திற்கு சான்றாக இருந்தது.ரப்பர் மரத்தை எடுத்துச் செல்லும் லாரிகளைத் தடுத்ததற்காக குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டனர். குடியேற்றவாசிகள் இந்த ரப்பர் மரங்கள் தங்களுக்கு சொந்தமானவை என்றும் அதை அகற்றுவது அவர்களின் வாழ்வாதாரத்திற்கான உரிமை மீறல் என்றும்கூறினர். இதன் விளைவாக பல கைதுகள், லாரிகள், கார்கள் போன்றவை தீக்கிரையாக்கப்பட்டன, கட்டிடம் உடைக்கப்பட்டன மற்றும் வன்முறைக்கு இரு கட்சிகளும் ஒருவருக்கொருவர் குற்றம் சாடினார்.

திடீரென நில குத்தகை 99 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டபோது ஒரு திருப்பம் ஏற்பட்டது.ஒரு மாநில அரசு நிறுவனமான பி.கே.என்.என்.எஸ்., திருப்பிச் செலுத்துவதற்காக, லோட்டஸ் 1200 ஏக்கரை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைத்தது. இதன் விளைவாக, 15 ஜூன் 2015 அன்று, நெகிரி செம்பிலன் எம்பி, முகமாட் ஹசன், 4 மற்றும் 2 ஏக்கர் நிலம் கெட்கோ வாழ் மக்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தார் .கெட்கோவில் 4 தசாப்த கால பிரச்சினை தீர்க்கப்பட்டதாக அவர் அறிவித்தார்.

அப்போதிலிருந்து கெட்கோ வாழ் மக்கள் இரு தரப்புகளாக பிரிந்துள்ளனர். 4 மற்றும் 2 ஏக்கர் நிலத்தை பெற ஒப்புக்கொண்டவர்களும் 8 மற்றும் 4 ஏக்கர் நிலத்தை பெற ஒப்புக்கொண்டவர்களாகவும்.8 ஏக்கருக்கு தங்களுக்கு உரிமை உண்டு என்று அவர்கள் நம்புகிறார்கள், மேலும் லோட்டஸ் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றதுடன், லோட்டஸ் தரையில் நிறுத்தியுள்ளனர். இறுதியாக நம்பிக்கை கூட்டணி அரசு இந்த துயரை முடிவுக்கு கொண்டு வரும் என நம்பினர். ஆனால் அவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம்தான். பி.என் அரசை போலவே நம்பிக்கை கூட்டணி அரசும் நிலத்தை லோட்டஸ்க்கு  வழங்கி மக்களை ஏமாற்றத்திற்கு தள்ளியுள்ளது.

எஸ்.அருட்செல்வன்

5-12-2020 இரவு மணி 9.01

(தமிழ் மொழிபெயர்ப்பு கௌசல்யா)

No comments:

Post a Comment

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...