Saturday, July 17, 2021

EO6 அவசர சட்டத்தின் 10-வது ஆண்டு நினைவுகூரல்



ஜூலை 2011- ஆம் ஆண்டில்  மலேசிய  சோசலிச கட்சியின்  (பிஎஸ்எம்) செயற்பாட்டாளர்கள் 6 பேரை 28 நாட்கள்  தடுத்து வைத்திருந்த சட்ட விவகாரம்தான்  EO6.   EO என்பது Emergency Ordinancபொது அமைதி மற்றும் குற்றவியல் தடுப்பு அவசர சட்டமாகும்.  9 ஜூலை 2011 அன்று கோலாலம்பூரில் பெர்சே அமைப்பு மாபெரும் பேரணியை ஏற்பாடு செய்திருந்தது. பெர்சே 2.0 அமைதி பேரணி என்ற அதற்கு நாடு தழுவிய நிலையில் மக்களின் ஆதரவும் திரட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதே காலக்கட்டத்தில் 13-வது பொது தேர்தலை முன்னிட்டு ஒரு புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு மக்களை ஒருங்கினைக்கும் பிரச்சாரத்தில் பி.எஸ்.எம் பரப்புரைக்காக  செயற்படுத்திய ஒரு வார்த்தைதான் “Udahlah tu, Bersaralah BN!”. நேர்மையான தேர்தலுக்காகவும் புதிய அரசாங்க மாற்றத்திற்காகவும் மக்களிடம்  பரப்புரையை  கொண்டு சேர்க்க பி.எஸ்.எம் தலைமைத்துவத்தில் அந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.  அதன் காரணமாக நடந்தேறிய கைது நடவடிக்கை நாட்டில் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பி.எஸ்.எம் அரசியல்  வரலாற்றில் இந்த நாள் மிக முக்கியமான சம்பவமாக கவனத்தில் கொள்வதால் அதை நினைவுக்கூறும் வகையில் பி.எஸ்.எம் சில இணைய நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. முன்னதாக  EO6 கைது நடவடிக்கையின் பின்னணியில் என்ன நடந்தது என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

பி.எஸ்.எம்  மேற்கொண்ட பிரச்சாரத்திற்காக மக்கள் அணிதிரட்டி, ஜொகூரிலிருந்து தலைநகரை நோக்கி ஒரு பேருந்தும், பேராக்கிலிருந்து பினாங்கை சந்தித்து தொடர்ந்து பெர்லிஸை நோக்கி மற்றுமொரு பேருந்தும் புறப்பட்டது.  

தொடக்கத்திலிருந்தே அதிகாரத்தில் உள்ளவர்களால் பி.எஸ்.எமின் இந்த பிரச்சாரமும், மக்களுக்கு விநியோகித்த துண்டுப்பிரசுரங்களும்  மிகுந்த தொந்தரவை கொடுத்தன. இதன் காரணத்தினால் போலீஸ் துறையின் பார்வை பி.எஸ்.எம் மீது இருந்ததோடு அதன் முன்னெடுப்புகளையும் கண்காணித்துக்கொண்டே இருந்தது.  செயற்பாடுகளை நிறுத்துவதற்கான காரியங்களையும் போலீஸ் மேற்கொள்ளவும் செய்தது.   பிரச்சாரத்திற்காக பயணம் மேற்கொண்ட இரண்டு பேருந்துகளை பல இடங்களில் நிறுத்தி விசாரனை மேற்கொள்ளப்பட்டன.   ஜொகூரிலிருந்து தலைநகரை நோக்கி வந்துக்கொண்டிருந்த பேருந்தை நேரங்காலம் பாராமல் பல இடங்களில் விசாரனை செய்து சிலமணி நேரங்களில் விடுவித்தார்கள். ஆனால், பினாங்கை நோக்கி சென்ற பேருந்தில் இருந்த தோழர்கள் 30 பேரும் தடுத்து வைக்கப்பட்டு மறுநாள் பினாங்கு நீதிமன்றத்தில்  நிறுத்தப்பட்டார்கள்.


அங்குதான் யாரும் எதிர்பார்க்காத விதமாக பி.எஸ்.எம் தோழர்கள் மீது வீண்பழி  சுமத்தப்பட்டது. அதாவது நேர்மையான தேர்தலுக்காக முன்னெடுத்த  போராட்டம் நாட்டின் மாமன்னருக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று திரித்து குற்றஞ்சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால்  ஆயுல் தண்டனை கிடைக்க வகைச் செய்யும் சட்டத்தின் கீழ் பேருந்தில் இருந்த 30 பேரும் 7 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டனர்.

அவர்களில் 6 பேர்  விசாரனைக்குப் பிறகு  ஜூலை 4-ஆம் தேதி காவலிலிருந்து விடுவிக்கப்பட்டனர். பின் அவர்கள்6 பேரையும்  அவசர சட்டம்  அதாவது  Emergency Ordinance – EO கீழ் வழக்கு பதிவு செய்து, புக்கிட் அமான் போலீஸ் அதிகாரிகள், அவர்களை  மீண்டும் கைது செய்து கோலாலம்பூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.  இந்த  Emergency Ordinance சட்டம்  இரண்டு ஆண்டுகளுக்கு நீதிமன்ற விசாரனை  மேற்கொள்ளாத வகையில் யாரையும் கைது செய்து 60 நாள் விசாரனைக்கு உட்படுத்த காவல்துறைக்கு அதிகாரம் கொடுப்பதோடு அவர்களை நாடு கடத்தவும் வகை செய்கிறது என்பது குறிப்பிடதக்கது. கிட்டதட்ட தேச நிந்தனை சட்டத்திற்கு இணையான ஒன்றுதான் இதுவும்.

(பினாங்கு தடுப்புக்காவலில் இருந்த மற்ற தோழர்கள்  பினாங்கு நீதிமன்ற விசாரனைக்குப் பிறகு நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டனர்.)

சுங்கை சிபுட் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர்  ஜெயகுமார்,  பி.எஸ்.எம் உதவித்தலைவராக இருந்த சரஸ்வதி, பிஎஸ்எம் மத்திய செயற்குழு உறுப்பினர்களான சூ சொன் கை, சுகுமாரன், சுங்கை சிபுட் வட்டார பி.எஸ்.எம் செயலாளர் லெட்சுமனன் மற்றும் பி.எஸ்.எம் இளைஞர் பிரிவைச் சேர்ந்த  ஆர். சரத்பாபு ஆகிய தோழர்கள்தான் இந்த  Emergency Ordinance  சட்டத்தின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.


பி.எஸ்.எம்  சோசலிச சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டு நேர்மையான முறையில் மக்களுக்காக போராடும் ஒரு கட்சி என அரசு தெரிந்து கொள்ள 35 நாட்கள்  பிடித்தது. உண்மையில் அனைவருக்குமே தெரியும்; மாமன்னருக்கு எதிராக  பி.எஸ்.எம் மீது விழுந்த குற்றச்சாட்டும், அதனைத் தொடர்ந்து 6 தோழர்கள் மீது சுமத்தப்பட்ட Emergency Ordinance அமைதி மற்றும் குற்றவியல் தடுப்பு அவசர சட்டமும்  அர்த்தமற்றது ஆதாரமற்றது என்று. காரணம் 1998-ஆம் ஆண்டிலிருந்து பி.எஸ்.எம் முன்னெடுத்த மக்கள்  பிரச்னைகளுக்கான போராட்டங்களை நாடு அறியும். தோட்ட மக்கள் பிரச்னைகள், நகர மக்களின் பிரச்னைகள் என, இன மத பேதம் இல்லாமல் களத்தில் நின்று போராடியிருக்கிறது மலேசிய சோசலிச கட்சி. 



எந்த ஒரு அசம்பாவிதத்தையும் பி.எஸ்.எம் தம் போராட்டங்களில் இதுவரை கொண்டிருக்கவில்லை. உண்மையில் பெர்சே 2.0 பேரணியை தடுக்கும்  சூழ்ச்சியில் தேசிய காவல்துறை பி.எஸ்.எம் மை கருவியாக பயன்படுத்த எண்ணினார்கள். ஆனால், அதில் அவர்கள் தோல்வியையே தழுவினார்கள். பல லட்சம் பேர் பெர்சே பேரணியில் கலந்துக்கொண்டு பேரணியை வெற்றி பெற செய்தார்கள். 


ஆனால், EO சட்டத்தின் கீழ் சிறையில் இருந்த  பி.எஸ்.எம் தோழர்கள் பெர்சே பேரணி முடிந்தும் கிட்டதட்ட ஒரு மாதங்கள் சிறையில் தண்டனையை அனுபவித்தார்கள். அந்த அநியாயத்தை  எதிர்த்து பி.எஸ்.எம் தோழர்கள்  அரசுக்கும் நீதிதுறைக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் பல போராட்டங்களையும் நெருக்குதலையும் தொடர்ந்து முன்னெடுத்துக்கொண்டே இருந்தனர். தினமும் போராடம் வெடித்தன.  உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலிருந்தும் பி.எஸ்.எம்-க்கு ஆதரவு குரல் எழுந்தது. பின்னர் போராட்டத்தின் அழுத்தம் தாங்க முடியாமல்  எந்த நிபந்தனையும் இல்லாமல் 29 ஜூலை 2011 அன்று சிறையில் இருந்த 6 தோழர்களும் விடுதலை செய்யப்பட்டனர். இந்தப் போராட்டத்தை நினைவுக்கூறும் வகையில் சில இணைய நிகழ்ச்சிகளை பி.எஸ்.எம் ஏற்பாடு செய்திருக்கிறது. அதன் விவரங்கள் பின்வருமாறு…

  • வெட்டிபேச்சு (இணைய கலந்துரையாடல்)
  • தேதி: 22/7/2021
  • நேரம்/இடம்: இரவு 8.30 மணிக்கு பி.எஸ்.எம் முகநூல் வழியாக
  •  
  • EO6 இணைய புகைப்படக்கண்காட்சி
  • தேதி:17/7/2021
  • இடம் : https://partisosialis.org/photo-gallery-10th-year-commemoration-of-the-detention-and-the-struggle-to-release-the-6-psm-activists-from-emergency-ordinance-2011-2021/ 

  • இணைய கருத்தரங்கு 
  • தேதி:29/7/2021
  • நேரம்/ இடம்: பி.எஸ்.எம் முகநூல் வழியாக 
செய்தியாளர்:  யோகி

Tuesday, July 6, 2021

துப்புரவு பணியாளர்களின் சம்பளக்குறைப்பு திட்டத்தை அரசு மீட்டுக்கொண்டது- PSM பிரச்சாரத்தின் வெற்றி

 

அரசாங்கப் பள்ளிகளில் துப்புரவு செய்துவந்த பணியாளர்களுக்கு சம்பள குறைப்பு மேற்கொள்ளும் நடவடிக்கையை அரசு மீட்டுக்கொண்டதில் மலேசியா சோசலிச கட்சி  மகிழ்ச்சியினை  தெரிவித்துக்கொண்டது. 

முன்னதாக  துப்புரவு தொழிலாளர்களின் சம்பளத்தை மாதத்திற்கு 40 விழுக்காடு, அதாவது 660 வெள்ளியிலிருந்து  720  வெள்ளிவரை  குறைக்க அரசு முடிவெடுத்திருப்பதாக குத்தகையாளர்களிடமிருந்து பி.எஸ்.எம் தகவல் அறிந்தது. 

குத்தகை நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட இந்தத் தகவல் உண்மையில் மலேசிய சோசலிச கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் மனிதவள அமைச்சின் கூற்றுப்படி  தொழிலாளர்களுக்கு சம்பளம் குறைப்பு என்பது சட்டவிரோதமாகும். ஆனால் அதே அமைச்சின் கீழ் இயங்கும்  கல்வித்துறை, அதன் தொழிலாளர்களின் சம்பளத்தை குறைப்பது என்பது முரண்பாடாக இருக்கிறது. எனவே கல்வித்துறையின்  இந்தக் கொள்கைத் திட்டத்தை எதிர்த்து நாடு தழுவிய அளவில் இணைய பிரச்சாரத்தை பி.எஸ்.எம் இன் அரசாங்கத்துறை ஒப்பந்த தொழிலாளர் அமைப்பு (JPKK)  மேற்கொண்டது.

அந்தப் பிரச்சாரத்தில்  கல்வித் துறையின் இந்நடவடிக்கையை குறித்து மிகக் கடுமையாக பி.எஸ்.எம்  சாடியிருந்தது. அடிப்படை சம்பளம் மட்டுமே பெறும் தொழிலாளர்களின் மாதந்திர சம்பள குறைப்பு என்பது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் சுமையாக அமைந்துவிடும்.  இந்த சம்பளக்குறைப்பு நடைமுறைக்கு வந்தால்  500 வெள்ளிக்கு குறைவாகவே தொழிலாளர்களுக்கு  மாதாந்திர சம்பளம்  கொடுக்கப்படும்.



துப்புரவு தொழிலாளர்களின் இந்தத் குத்தகை முறையையே   ரத்து செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக பிஎஸ்எம் குரல் கொடுத்துக்கொண்டிருக்கும்போது, அதையும் தாண்டி இந்த பெருந்தொற்றுக்காலத்தில்  அடிப்படை சம்பளத்தையும் குறைப்பது என்பது ஏழைகளை அதலபாதாளத்தில் தள்ளுவதற்கு சமமாகும். இவ்விளைவுகளைக் மேற்கோள்காட்டி பி.எஸ்.எம் மேற்கொண்ட   இணைய பிரச்சாரத்தை மலேசிய மக்கள் அதிகம் பகிர்ந்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதன் நெருக்கடி காரணமாக கல்வி அமைச்சு  அறிவித்திருந்த துப்புரவு தொழிலாளர்களின் மாதாந்திர சம்பள குறைப்பு தற்போது மீட்டுக்கொள்ள பட்டுவிட்டது.  இது பி.எஸ்.எம் மேற்கொண்ட பிரச்சாரத்தின் வெற்றியாகவே கருதப்படுகிறது.

 

.

Friday, July 2, 2021

துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் குறைப்பா?


அரசாங்கத் துறையில் குத்தகை அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் குறைப்பா?

அரசாங்கத் துறைகளில் குத்தகை அடிப்படையில் பணிபுரிந்து வரும் குறிப்பாக அரசாங்கப் பள்ளிகளின் துப்புரவு பணியாளர்களுக்கு சம்பள குறைப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மலேசிய சோசலிச கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

துப்புரவு தொழிலாளர்களின் சம்பளத்தை மாதத்திற்கு 40 விழுக்காடு அதாவது 660 வெள்ளி அல்லது 720 வெள்ளியாக குறைக்க திட்டமிட்டு வருவதாக அறிகிறோம். நாட்டில் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் மொத்தம் 50,000 துப்புரவு தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட பி40 பிரிவைச்சேர்ந்த குடும்பங்களுக்கு உதவுவதன் மூலம் பொருளாதாரத்தை ஆதரிப்பதற்காக கோடிக்கணக்கான வெள்ளியை செலவிட வேண்டியிருக்கும். covid-19 தொற்றுநோய் அரசாங்கத்திற்கு பெரும் நிதி அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாங்கள் அறிகிறோம்.

 ஆயினும்கூட ஊதியங்களை குறைப்பதற்கான நடவடிக்கை covid-19 நெருக்கடியின் போது கடுமையான வறுமை மற்றும் பட்டினியை தவிர்ப்பதற்கான அரசாங்கத்தின் உண்மையான நோக்கத்திற்கு முரணானது என்று பிஎஸ்எம் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் ஆர். மோகனராணி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையான காரணம் என்னவென்றால் இந்த வகை தொழிலாளர்களுக்கான ஊதியக் குறைப்பு அவர்களில் பெரும்பாலோர் ஏற்கனவே பி20 வரம்பில் இருப்பதால் அவர்கள் இன்னும் எழ்மையானவர்களாக இருப்பார்கள்.

இந்தக் குழுக்களில் ஏராளமானோர் தனித்து வாழும் தாய்மார்கள் அல்லது உயரும் வாழ்க்கை செலவை ஈடுசெய்ய குறைந்தபட்ச ஊதியமாக 1100 வெள்ளி மற்றும் 1200 வெள்ளி சம்பளத்துடன் போராடும் ஒற்றை வருமான ஆதாரங்களாக இருப்பார்கள். 

இந்த தொழிலாளர்கள் தங்கள் செலவுகளை அரை சம்பளத்துடன் எவ்வாறு நிர்வகிக்க முடியும் என்பதை அரசாங்கம் உணர வேண்டும். உணவு, வீட்டுவசதி இன்னும் பிறபயன்பாடுகளான போக்குவரத்து மற்றும் சுகாதாரம் போன்ற செலவுகளை அவர்கள் இந்த குறைந்தபட்ச சம்பளத்தில்தான் ஈடு செய்ய வேண்டும். எனவே அவர்களின் வருமானம் 40 விழுக்காடு குறைக்கப்பட்டால் அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது.

அரசாங்கம் தனது ஊழியர்களுக்கான சம்பளத்தை குறைகிறதா?  தனியார் நிறுவனங்களை பொறுத்தவரை அரசாங்கம், உதவித் திட்டத்தை வழங்குகிறது. இவை அனைத்தும் மக்களுக்கு நல்ல நடவடிக்கைகள். ஆனால், துப்புரவு தொழிலாளர்களை ஏன் புறக்கணிக்க வேண்டும்?

 நம் நாட்டின் வேலைவாய்ப்பு சட்டங்களின்படி முதலாளிகள் ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க முடியாது இந்த விவகாரத்தில் அரசாங்கம் வேலைவாய்ப்பு சட்டத்தை மீறுகிறது அரசு பள்ளிகளில் ஒப்பந்த தொழிலாளர்களின் சம்பளத்தை குறைக்கும் முடிவை உடனடியாக ரத்து செய்யுமாறு பிஎஸ்எம் மலேசிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.


நன்றி; மலேசிய நண்பன் நாளிதழ் (2/7/2021)

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...