Tuesday, June 30, 2026

இனவெறி எதிர்ப்புக்கு வேட்பாளரின் உறுதி மொழி

நான், அமீர் ஷாஃபிக், ஜொகூர் மாநிலத் தேர்தலில் N.48 ஸ்கூடாய் தொகுதிக்கான மலேசிய சோசலிசக் கட்சியின் (PSM) வேட்பாளர்.

இன அடிப்படையிலான பாகுபாடு மற்றும் இன அரசியல் ஆகியவை மலேசிய மக்களைப் பிளவுபடுத்தி வரும் நீண்டகால சமூகப் பிரச்சினைகளாக இருப்பதை ஆழமாக உணர்கிறேன். எனவே, இனவெறி மற்றும் இன அரசியலுக்கு எதிராகப் போராடும் மலேசிய சோசலிசக் கட்சியை சேர்ந்த நான் , பின்வரும் உறுதிமொழியை ஏற்கிறேன்:

  1. மக்களின் வாக்குகளையோ ஆதரவையோ பெறுவதற்காக எந்தவிதமான இன அரசியலையும் நான் பயன்படுத்த மாட்டேன்.
  2. தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்ட உரைகள், கருத்துத் தெரிவிப்புகள், ஊடக அறிக்கைகள், சமூக ஊடகப் பதிவுகள், துண்டுப் பிரசுரங்கள், பதாகைகள் அல்லது வேறு எந்தப் பிரச்சாரப் பொருள்களிலும் இனவெறியையோ இன அடிப்படையிலான வெறுப்பையோ தூண்டும், பிற இனத்தவரையோ புலம்பெயர்ந்தவர்களையோ பாகுபடுத்தும் எந்தவிதமான கூறுகளையும் நான் பயன்படுத்த மாட்டேன்.
  3. எங்களின் அனைத்து நடவடிக்கைகளும் அரசியல் போராட்டங்களும் மக்களின் வர்க்க (Class) அடிப்படையிலேயே அமையும்; தோலின்  நிறம் அல்லது இன அடிப்படையில் அல்ல. எங்களின் கொள்கைகளும் போராட்டங்களும் எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஒடுக்கப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவே அமையும்.
  4. நான் மாநில சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், சமத்துவச் சட்டம் (Equality Act) ஒன்றை இயற்றுவதற்கான முன்மொழிவை முன்வைக்க முயற்சிப்பேன்.

இந்த உறுதிமொழி, மலேசியாவில் இனவெறி மற்றும் இன அரசியலை ஒழிப்பதற்கான எங்களின் உறுதியை மீண்டும் வலியுறுத்துகிறது.

மக்கள் வாழ்க!
இனவெறி ஒழியட்டும்!
சமத்துவம் வெல்லட்டும்!

2022-க்கு முன்பிருந்த அன்வார் இப்ராஹிம் இப்படிப்பட்ட அறிவிப்பை ஏற்றுக்கொண்டிருப்பாரா?

 ஊடக அறிக்கை

PMX-இன் காரணத்தை ஏற்க முடியாது: பொதுநிதி மக்களுக்குச் சொந்தமானது, தேர்தல் பிரச்சார மூலதனம் அல்ல


ஜொகூர் மாநிலத் தேர்தலுக்கான (PRN) வேட்புமனுத் தாக்கல் நாளுக்கு சில நாட்களுக்கு முன்பு, தாமான் உங்கு துன் அமினா அடுக்குமாடிக் குடியிருப்பைச் சீரமைக்கும் பணிகளுக்காக 2.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்த செயலை நான் மிகவும் கடுமையாகக் கருதுகிறேன். இந்த ஒதுக்கீடு, ஆளும் கட்சி வேட்பாளர்களின் பிரச்சாரப் பொருளாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்பே அறிவிக்கப்பட்டது.

வேட்புமனுத் தாக்கல் நாளுக்கு முன்பு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால், அது சட்டத்தை மீறவில்லை என்று பிரதமர் வாதிடலாம். இருப்பினும், இது வெறும் சட்ட நுணுக்கம் பற்றிய கேள்வி அல்ல, நேர்மை மற்றும் நீதி பற்றியது. நான் எழுப்ப விரும்பும் ஒரு முக்கியமான கேள்வி என்னவென்றால்,  2022-க்கு முன்பிருந்த அன்வார் இப்ராஹிம் இப்படிப்பட்ட அறிவிப்பை ஏற்றுக்கொண்டிருப்பாரா?

பொதுநிதி மக்களுக்குச் சொந்தமானது. அது மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிப்பணமும் அவர்களின் உழைப்பின் பலனுமாகும்; எந்த அரசியல் கட்சிக்கும் சொந்தமானதல்ல. மக்களின் வீடுகளைப் பழுதுபார்க்கும் நிதி தேவையான நேரத்தில் — அதாவது முன்கூட்டியே வழங்கப்பட வேண்டும்; வாக்குகளைப் பெறுவதற்கான மூலதனமாகப் பயன்படுத்தும் வகையில் தேர்தல் கால அட்டவணைப்படி அறிவிக்கப்படக்கூடாது.

தாமான் உங்கு துன் அமினா குடியிருப்பின் மக்கள் எந்த அமைச்சரிடமிருந்தும் “பரிசு” பெற வேண்டிய அவசியமில்லை. பாதுகாப்பான வீடு, சீரான பராமரிப்பு மற்றும் கண்ணியமான வாழ்க்கை ஆகியவற்றை பெறுவது அவர்களின் உரிமைகள். குறைந்த வருமான மக்களுக்கான வீடுகளைப் பராமரிப்பது அரசின் பொறுப்பாகும்; அரசியல் ஆதரவுக்கு மாற்றாக வழங்கப்படும் உதவி அல்ல.

தேர்தல் சட்டத்தின் பலவீனங்களும் இந்த நடைமுறையை நியாயப்படுத்தும் காரணமாக இருக்க முடியாது. பொதுநிதி ஒதுக்கீடுகளை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்த அரசு வாய்ப்பைப் பெறும் வகையில் சட்டத்தில் இடைவெளி இருந்தால், அனைத்து வேட்பாளர்களுக்கும் சமமான போட்டி சூழலை உறுதி செய்வதற்காக அந்தச் சட்டம் திருத்தப்பட வேண்டும்.

ஸ்கூடாய் தொகுதிக்கான Parti Sosialis Malaysia (PSM) வேட்பாளர் என்ற முறையில், பொதுநிதி மக்களின் தேவைகளின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்; அரசியல் நலன்களின் அடிப்படையில் அல்ல என்று நான் நம்புகிறேன். பொதுமக்கள் குடியிருப்புகளின் பராமரிப்பு தொடர்பான முடிவுகள் உள்ளூராட்சி அமைப்புகளும் குடியிருப்பாளர் குழுக்களும் இணைந்து எடுக்க வேண்டியது; தேர்தலுக்கு முன் அமைச்சர்கள் வெளியிடும் அறிவிப்புகளின் மீது சார்ந்திருக்கக் கூடாது.

மக்களுக்கு உரிய அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்காக எந்த அரசியல்வாதிக்கும் நன்றிக்கடன் பட்டவர்களாக மக்கள் உணர வேண்டியதில்லை. பொதுநிதி என்பது மக்களின் உரிமை; அரசியல் ஆதரவை வாங்குவதற்கான கருவி அல்ல.

அமீர் ஷாஃபிக் அமீர் சோக்ரே 

மலேசிய சோசலிசக் கட்சி

 N48 Skudai வேட்பாளர் 

1 ஜூலை 2026

மரினாவைப் போல சேவை செய்ய முடியும் என்பதை நிரூபிப்பேன் - ஸ்கூடாய் வேட்பாளர் அமீர்

PSM-இன் ஒரே வேட்பாளர் அமீருக்கு, ஒரு செயற்பாட்டாளராகப் பெற்ற அனுபவம்,  வாக்காளர்களின் இதயங்களைக் கவர உதவுகிறது..


ஜொகூர் பாரு – கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்களுடன் நெருக்கமாக பணியாற்றிய அனுபவம், ஜொகூர் மாநிலத் தேர்தலில் (PRN) வெற்றி பெறுவதற்கான சிறப்பான பலமாக திகழ்கிறது என்று Parti Sosialis Malaysia (PSM) கட்சியின் ஒரே வேட்பாளரான அமீர் ஷாஃபிக் அமீர் சோக்ரே கருதுகிறார்.

ஸ்குடாய் மாநில சட்டமன்றத் தொகுதியில் (DUN Skudai) போட்டியிடும் 40 வயதான அமீர்ஷாஃபிக், இந்த அனுபவத்தை அந்தத் தொகுதியில் வெற்றி பெறுவதற்கான ஒரு நுழைவுச்சீட்டாகவும் கருதுகிறார்.

“ஸ்குடாய் தொகுதியில் மூன்று புதிய முகங்களை எதிர்கொண்டாலும், சமூக ஆர்வலராகவும் அடிப்படை மக்கள் பணிகளில் ஈடுபட்டவராகவும் இருந்த அனுபவம் எனக்கு முன்னிலை அளிக்கிறது.

“வேட்பாளராக இது எனது முதல் தேர்தல். ஆனால் ஒரு சமூக ஆர்வலராக, கடந்த ஐந்து ஆண்டுகளாக ஸ்குடாய் மக்களுடன் நெருக்கமாக பழகி, அவர்களின் பிரச்சினைகளை கண்டறிந்து தீர்க்க முயன்றுள்ளேன்.

“நாம் செயல்படுத்தக்கூடிய பல முறைகள் ஏற்கனவே உள்ளன. மக்களைச் சந்திப்பதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை.

“மற்ற வேட்பாளர்களும் புதிய முகங்களே. எனவே இது ஆரோக்கியமான போட்டியாகும். ஆனால் இதற்கு முன் நாம் செய்த பணிகளைப் பார்க்கும்போது, வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு எங்களுக்கு இருப்பதாக நான் நம்புகிறேன். அந்த அனுபவமே என்னை மேலும் முன்னேற்றும். இறுதியில் மக்கள் தான் மதிப்பீடு செய்வார்கள்,” என்று  ஸ்குடாய் பாரு பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவர் இதனை தெரிவித்தார்.

PSM சார்பில் போட்டியிடும் அமீர் , தற்போது Pakatan Harapan (PH) சார்பில் மரினா இப்ராஹிம் வகித்துவரும் ஸ்குடாய் தொகுதியை கைப்பற்றும் நோக்கில் மேலும் மூன்று வேட்பாளர்களை எதிர்கொள்கிறார்.

அந்தத் தொகுதியில் Barisan Nasional (BN) சார்பில் நிக்கோல் @ ஆ கீ, PH சார்பில் கார்த்தியாயினி ஜெயபாலன் மற்றும் Parti Bersama Malaysia (Bersama) சார்பில் யூஜின் சுவா மேங் சோங் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஜோகூர் PSM செயலாளராகவும் இருக்கும் அமீர் ஷாஃபிக், மேற்குறிப்பிட்ட காரணங்கள் அடிப்படையில்தான், போட்டியிடுவதற்கான ஒரே மாநிலத் தொகுதியாக ஸ்கூடாயை PSM தேர்ந்தெடுத்தது என்றும் தெளிவு படுத்தினார்.

“2022 ஆம் ஆண்டில் நாம் கோத்தா இஸ்கந்தரில் போட்டியிட்டோம். ஆனால் இந்த முறை ஸ்குடாயைத் தேர்ந்தெடுத்துள்ளோம். ஏனெனில் இங்கு PSM நீண்டகாலமாக அடிப்படை மக்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

“இங்கு ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு பி.எஸ்.எம் பல உதவிகளை வழங்கியுள்ளோம். எனவே தேர்தல் வந்தபோது, மர்ஹேன் மக்களின் குரல்களை எழுப்புவதற்கான ஒரு தளமாக இந்த இடத்தை பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் எண்ணினோம்," என்று அவர் கூறினார்.

தேர்தல் பிரசாரத்தின் நான்காவது நாளில், பல நேர்மறையான வரவேற்புகளைப் பெற்றதாகவும், மக்களின் குறைகளையும் கவலைகளையும் கவனமாகக் கேட்டதாகவும் அவர் கூறினார். மக்கள் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவற்றை பொறுப்புடன் கையாளுவேன் என்றும் தெரிவித்தார்.

மேலும், பிரச்சாரத்திற்காக சமூக ஊடகங்களில் செயல்படுவதுடன், நேரடியாக மக்களைச் சந்தித்து உரையாடும் முறையையே அதிகம் விரும்புவதாகவும் அமீர் கூறினார்.

“இங்குள்ள மக்கள் கூறும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பானது. குறிப்பாக சாலைகள் தொடர்பானவை. இங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது; பல சாலைகள் சேதமடைந்தும் உள்ளன.

“ஒரு வயதான பெண்மணியை சந்தித்தேன். இங்கு வீட்டு வாடகை அதிகரித்து வருவதாக அவர் கூறினார். அவர் ஒரு கடை உதவியாளராக மட்டுமே வேலை செய்கிறார். வாடகை தொடர்ந்து உயர்ந்தால் அதைச் சமாளிக்க முடியாது என்றார். இத்தகைய பிரச்சினைகளைத் தீர்க்க நாங்கள் முயற்சிப்போம்,” என்றார்.

ஸ்கூடாய் மக்களுக்கு உண்மையாக சேவை செய்த மக்களவை பிரதிநிதியான மரினாவை “இழந்தது” குறித்து தானும் மக்களுடன் சேர்ந்து வருத்தப்படுவதாக அமீர்  கூறினார்.

அவர் சந்தித்த பெரும்பாலான ஸ்கூடாய் மக்கள், மரினாவே தாங்கள் தேர்ந்தெடுத்த சிறந்த மக்களவை பிரதிநிதி என்று தெரிவித்ததாக அவர் கூறினார்.

“PSM அவரை (மரினா) மதிக்கிறது. ஆனால் மக்களால் நேசிக்கப்பட்டு, சிறப்பாகப் பணியாற்றிய ஒரு பிரதிநிதி DAP கட்சியின் உட்கட்சிச் சூழ்ச்சிக்கு 'பலியானார்' என்பது வருத்தமளிக்கிறது.

“ஆனால் ஒரு வேட்பாளராக, மரினா இங்கு விட்டுச் சென்ற சேவை மனப்பான்மையை நான் உணர்கிறேன். அதனால் நானும் மிகச் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும். மக்களுக்கு ஒரு மாற்று வாய்ப்பை வழங்கி, நாங்களும் மரினாவைப் போல சேவை செய்ய முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

நன்றி — MalaysiaGazette

Thursday, June 18, 2026

ஊழல் மற்றும் மக்களின் பண விரயத்திற்கு எதிரான வட்டமேசை கலந்துரையாடல்

 PSM பத்திரிகை அறிக்கை – 16 ஜூன் 2026

PSM, MUDA மற்றும் இன்னும் சில அமைப்புகள் இணைந்து உரையாடியதில், 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் தேசிய நிறுவனங்களைச் சீர்திருத்தும் முயற்சிகள் எதிர்பார்த்த அளவில் வெற்றிபெறவில்லை என்று கருதுகின்றோம். காரணம், அப்போது ஆட்சியைப் பொறுப்பேற்ற பாகத்தான் ஹரப்பான், முழுமையான செயல் திட்டத்தை முன்கூட்டியே தயாரிக்காமல் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டது.

அந்த நேரத்தில், ஊழல் நிறைந்த அரசை அகற்றினால் அனைத்து பிரச்சினைகளும், குறிப்பாக ஊழலும், எளிதில் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை பலரிடமும் இருந்தது. ஆனால் உண்மை நிலை வேறுபட்டதாக அமைந்திருக்கிறது. 

அரசாங்க அமைச்சுகளைப் பொறுப்பேற்கும் முன் முழுமையான திட்டம் இல்லாவிட்டால், புதிய நிர்வாகம் பழைய அமைப்பின் செயல்முறைகளால் பாதிக்கப்படும். அதன் விளைவாக, பழைய அமைப்பு தன்னைத்தானே தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்ளும். இதுவே பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கத்திற்கும் நிகழ்ந்திருக்கிறது. இன்று அவர்கள், 2018-க்கு முன் பாரிசான் நேஷனல் வழிநடத்திய அமைப்பிலிருந்து பெரிதாக மாறாத ஒரு சூழலில் சிக்கியுள்ளனர்.

இதனால், மலேசிய மக்களுக்கு அர்த்தமுள்ள மாற்று அரசியல் தேர்வை வழங்கும் நோக்கில் ஒரு புதிய முற்போக்கு கூட்டணியை உருவாக்க விரும்பும் நாங்கள், நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து தொடர் கலந்துரையாடல்களை நடத்தி, நாட்டின் நிர்வாகத்தை மக்கள் மயமாகவும் தூய்மையானதாகவும் மாற்றுவதற்கான விரிவான செயல் திட்டத்தை உருவாக்க முன்வருகிறோம்.

இந்த முயற்சியின் கீழ் விவாதிக்கப்படவுள்ள முக்கிய தலைப்புகள்:

• ஊழல் மற்றும் மக்களின் பண விரயத்தைத் தடுக்கும் உத்திகள்
• காலநிலை அவசரநிலையை எதிர்கொள்ளும் வழிமுறைகள்
• அனைவருக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்
• இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை மேம்படுத்துதல்
• அரசின் வருவாயை அதிகரிக்கும் வகையில் தேசியக் கடனை நிர்வகித்தல்

இந்தப் பட்டியல், கலந்துகொள்ளும் தரப்புகளின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் விரிவுபடுத்தப்படவோ மாற்றப்படவோ செய்யப்படும்.


இந்த வட்டமேசை கலந்துரையாடல் அமர்வு 13 ஜூன் 2026 அன்று KLSCAH-ல் தொடங்கியது. ஊழல் மற்றும் மக்களின் பண விரயத்தை எதிர்கொள்ளும் உத்திகள் குறித்த வட்டமேசை கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் MUDA, PSM, ஓராங் அஸ்லி கட்சி, PRM மற்றும் பல அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்த 41 பேர் பங்கேற்றனர்.

இந்த அமர்வு, இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற இருவரின் உரையுடன் தொடங்கியது — C4-வின் முன்னாள் CEO திரு புஷ்பன் முருகையா மற்றும் Projek SAMA-வைச் சேர்ந்த திருமதி நியோ சோ யிங் ஆகியோர். அவர்கள் ஊழல் மற்றும் பொதுமக்கள் பணம் கசிவு சமூகம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை விளக்கினர். அதைத் தொடர்ந்து வட்டமேசை விவாத அமர்வு நடைபெற்றது, பங்கேற்பாளர்கள் தங்கள் கருத்துக்கள் / பரிந்துரைகளை பகிர்ந்துகொண்டனர்.

இந்த விவாதத்தின் குறிப்புகள் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் அவர்கள் தங்களது அமைப்புகளுடன் மேலதிக ஆலோசனைகளை மேற்கொள்ள முடியும்.

ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்கள் நிறைவடைந்த பின்னர், அடுத்த வட்டமேசை கலந்துரையாடலுக்கான தேதி அறிவிக்கப்படும்.


வெளியிட்டவர்: மைக்கேல் ஜெயக்குமார் தேவராஜ், PSM தேசியத் தலைவர்

28-வது மலேசிய சோசலிசக் கட்சியின் தேசிய மாநாட்டின் தீர்மானம்

  28- வது மலேசிய சோசலிசக் கட்சியின் தேசிய மாநாட்டின் தீர்மானம் 23 ஆகஸ்ட் 2026, பத்துமலை 1. குறைந்தபட்ச ஊதியத்தை வாழ்க்கை செலவீனத்திற்கு ...