மலேசியா: ரோஹிங்கியா அகதிகள், அடக்குமுறையையும் கட்டாய நாடுகடத்தல் அச்சுறுத்தலையும் எதிர்கொள்கின்றனர்
மலேசியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஆணையம் (UNHCR) மியான்மாரைச் சேர்ந்த 1,26,000 ரோஹிங்கியா அகதிகளை பதிவு செய்துள்ளது. இதற்கு மேலாக, பதிவு செய்யப்படாத அகதிகளின் எண்ணிக்கை தெரியவில்லை. இவர்கள் அனைவரும் அரசின் அதிகாரப்பூர்வ அடக்குமுறையையும் வேகமாக அதிகரித்து வரும் இனவாத வெறுப்புப் பிரச்சாரத்தையும் எதிர்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில், வேலை செய்யும் உரிமை இல்லாமல் வாழ்வாதாரத்திற்காக கடுமையாகப் போராடி வருகின்றனர்.
ஜூலை 27 அன்று, வடக்கு மாநிலமான பினாங்கில் தங்களது குடியிருப்புப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, 100-க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் கோலாலம்பூரில் உள்ள UNHCR அலுவலகத்தின் முன்பு ஒன்று கூடியனர்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, குடிநுழைவு தடுப்புக்காவலில் உள்ள 5000 ரோஹிங்கியா இனத்தவரைத் திரும்பப் பெற்றுக்கொள்ள மியான்மார் அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாக பிரதமர் அன்வர் இப்ராஹிம் அறிவித்தார். ஜூன் 30 நிலவரப்படி, மலேசியாவின் குடிவரவு தடுப்புக்காவல் மையங்களில் 22,166 பேர் மோசமான சூழ்நிலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
ரோஹிங்கியா அகதிகள் மீதான தாக்குதல்கள் எவ்வாறு தீவிரமடைந்து வருகின்றன என்பது குறித்து, Green Left அமைப்பைச் சேர்ந்த பீட்டர் பாய்ல், சுயாதீனப் பார்வையாளரும் அகதிகள் உரிமை ஆர்வலருமான ஏஞ்சலின் ஷான்னன் மற்றும் மலேசிய சோசலிசக் கட்சியின் (PSM) உறுப்பினரும் நீண்டகால அகதிகள் உரிமை ஆர்வலருமான மாதவி மது ஆகியோர் கலந்து பேசினார்.
மலேசியாவில் ரோஹிங்கியா அகதிகள் மீதான துன்புறுத்தல் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் யாவை?
மாதவி மது: இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில், குறிப்பாக இணையதளங்களில் ரோஹிங்கியா இனவாத எதிர்ப்பு வெறுப்புப் பேச்சும் எதிர்மறை மனப்பான்மையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன.
சமூக ஊடகங்களில் பரவிய பகைமையான கருத்துகள், தரை மட்டத்திலும் அதிக எதிர்ப்பை உருவாக்கின. இதன் விளைவாக, ரோஹிங்கியா அகதிகள் பொதுமக்களால் துன்புறுத்தப்பட்ட பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த வெறுப்பலைக்கு காரணமாக, இணையத்தில் பரவிய தவறான தகவல்களும் இருந்தன. “ரோஹிங்கியா சாலிடாரிட்டி நெட்வொர்க் மலேசியா” என்ற பெயரில் போலியாக செயல்பட்ட ஒரு கணக்கு, ரோஹிங்கியா அகதிகள் நிலமும் சிறப்பு உரிமைகளும் கோருகின்றனர் என பொய்த் தகவலைப் பரப்பியது. மேலும், “மலேசிய ரோஹிங்கியர்களின் தலைவர்” என்று தன்னை அறிமுகப்படுத்திய ஒருவர், செலாயாங் நகரத்தை ரோஹிங்கியா சமூகத்திற்காக ஒதுக்க வேண்டும் என்று கோரியதாக போலியான விளம்பரப் பதாகைகளும் பரப்பப்பட்டன.
இந்தப் பொய்யான கதைகள் பொதுமக்களின் விரோத மனநிலையைத் தூண்டி, ரோஹிங்கியா அகதிகளுக்கு எதிரான பாகுபாட்டை மேலும் தீவிரப்படுத்தின.
அஞ்சலின் ஷன்னன்: ரோஹிங்கியர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பே வெளிப்படத் தொடங்கின.
சாலைப் போக்குவரத்து துறை உரிமம் இல்லாத வாகனங்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கையை ஒரு “சோஃபியான்” (Sofian) என்ற நபர் தலைமையிலான தன்னார்வக் குழு காரணமாகக் கொண்டு, ரோஹிங்கியா சமூகத்தினரை கண்காணிக்கத் தொடங்கியது. மலேசிய சட்டப்படி “சட்டவிரோத குடியேறிகள்” எனக் கருதப்படும் அகதிகளுக்கு வாகனம் ஓட்டும் உரிமம் வழங்கப்படுவதில்லை.
சோஃபியானின் குழு பாகான் டாலாம், பட்டர்வொர்த் பகுதியில் வீடு வீடாகச் சென்று ரோஹிங்கியா குடும்பங்களை மிரட்டியது, தாக்கியது, தொந்தரவு செய்தது. மேலும், எந்தச் சட்ட அதிகாரமும் இல்லாமல் அவர்கள் வைத்திருந்த வாகனங்களையும் பறிமுதல் செய்தது. இந்தத் தொல்லைகள் பினாங்கைத் தாண்டி நாடு முழுவதும் பரவின.
இத்தகைய நிகழ்வுகளையும், ஒரு குறிப்பிட்ட சீன சில்லறை வணிக நிறுவனத்தின் மீதான இதேபோன்ற இனவெறித் தாக்குதல்களையும் உன்னிப்பாகக் கண்காணித்ததில், சோஃபியானின் கும்பலுக்கும் குறிப்பிட்ட UMNO அரசியல்வாதிகளுக்கும் இடையே ஒரு சந்தேகத்திற்கிடமான தொடர்பு இருப்பது தெரியவந்தது.
வெறுப்புப் பிரச்சாரம் தீவிரமடைவது, சமீபத்திய மாநிலத் தேர்தல்கள் மற்றும் வரவிருக்கும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடையதா?
மாதவி மது: சமீபத்திய ரோஹிங்கியா எதிர்ப்பு வெறுப்புப் பேச்சு, நேரடியாக மாநிலத் தேர்தல்களோ அல்லது வரவிருக்கும் பொதுத் தேர்தலோடு தொடர்புடையது என்பதை நிரூபிக்கும் தெளிவான ஆதாரம் இல்லை.
ஆனால், கடந்த காலங்களில் தேர்தல் காலங்களில் அகதிகள் மற்றும் ரோஹிங்கியர்களுக்கு எதிரான கருத்துகள் சில வாக்காளர்களின் ஆதரவைப் பெற பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே இந்த சாத்தியத்தையும் முற்றிலும் நிராகரிக்கவும் முடியாது.
அகதிகளை, குறிப்பாக ரோஹிங்கியா சமூகத்தினரைக் குறிவைத்து சமீபத்தில் சமூக ஊடகங்களில் தாக்குதல்கள் தொடங்குவதற்கு முன்பு, தங்களை வலதுசாரி ஆர்வலர்கள் என்று கூறிக்கொண்ட சிலர், இந்து சமூகத்திற்கு எதிராக ஒரு வெறுப்புப் பிரச்சாரத்தைத் தொடங்கினர். நாடு முழுவதும் சட்டவிரோதக் கோயில்கள் என்று சொல்லப்படுபவை பெருகியதற்கு இந்துக்களே காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த அடுத்தடுத்த பிரச்சாரங்களின் காலமானது, ஒருங்கிணைக்கப்பட்ட அடையாள அடிப்படையிலான அணிதிரட்டலின் ஒரு பரந்த வடிவத்தைக் காட்டுகிறது. இந்த வலதுசாரி சக்திகள், இன மற்றும் மத ரீதியான பதட்டங்களைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் பொதுமக்களின் மனநிலையையும் தேர்தல் ஆதரவையும் மீண்டும் வலதுசாரி BN [பாரிசான் நேஷனல்] கூட்டணிக்குத் திருப்பும் நோக்கத்தில், அன்வார் நிர்வாகத்தைக் குலைக்க முயல்கின்றன என்று கருதுவது சாத்தியமாகிறது.
அதே சமயம், அரசாங்க அமைப்புகளும் குடிமக்கள் அமைப்புகளும் இந்த தவறான தகவல்களையும் வெறுப்புப் பேச்சுகளையும் எதிர்த்து வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துள்ளன.
“ரோஹிங்கியர்கள் பல குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்” மற்றும் “அவர்கள் மலேசிய சுகாதார அமைப்புக்கு சுமையாக உள்ளனர்” போன்ற குற்றச்சாட்டுகள் சமூக ஊடகங்களில் பரவின.
ஆனால் காவல்துறைத் தலைமை அதிகாரி, 2024 முதல் 2026 ஜூன் வரை மலேசியாவில் உள்ள ரோஹிங்கியா மக்கள்தொகையில் வெறும் 89 பேர் மட்டுமே (0.02%) குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறி, ஆதாரமற்ற ஊகங்களைப் பரப்ப வேண்டாம் என்று பொதுமக்களை எச்சரித்தார்.
சுகாதார அமைச்சும், அகதிகள் மலேசியப் பொதுமருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்படும் முழு கட்டணத்தையே செலுத்துகின்றனர்; அவர்களுக்கு எந்த மானியமும் கிடைப்பதில்லை என்று தெளிவுபடுத்தியது.
மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (SUHAKAM) மற்றும் பல குடிமக்கள் அமைப்புகளும் வெறுப்புப் பேச்சைக் கண்டித்தன.
இருப்பினும், கடந்த ஆறு மாதங்களில் குடிவரவு அமலாக்க நடவடிக்கைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. 30,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பதிவு செய்யப்படாத அகதிகளும் இந்த நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சமீபத்திய ஆண்டுகளில் நடந்த மிகவும் தீவிரமான குடிவரவு அமலாக்க நடவடிக்கையாகும்.
அஞ்சலின் ஷன்னன்: 2022 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, அன்வார் தலைமையிலான பக்கத்தான் ஹரப்பான் (PH), அம்னோ (UMNO) மற்றும் பிற கிழக்கு மலேசிய அரசியல் கட்சிகளுடன் ஓர் ஆளும் கூட்டணியை அமைத்தது. இப்போது PH தனது திசையை இழந்துவிட்டது, மேலும் 'democratic reforms ' [ஜனநாயக சீர்திருத்தங்கள்] என்ற வாக்குறுதி பெரும்பாலும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது.
வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் முந்தைய ஊழல் விவகாரங்களால் நடுத்தர மற்றும் குறைந்த வருமான மக்களிடையே அதிருப்தி அதிகரித்துள்ளது. இதன் பிரதிபலிப்பாக, சமீபத்திய ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் PH தோல்வியடைந்தது.
பிப்ரவரி 2028-க்கு முன்னர் நடத்தப்பட வேண்டிய அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, PH தற்போது சேதக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
பழமைவாதக் கட்சிகளிடையே மேலும் பிளவு ஏற்படுவது, அதிகாரப் போராட்டங்கள் மற்றும் அரசியல் பலிகடா ஆக்குதல் ஆகியவற்றின் அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கலாம். இவை பழங்கால அரசியல் தந்திரங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் மூலம் மேலும் வஞ்சகமானதாகவும் ஆபத்தானதாகவும் மாற்றப்பட்டுள்ளன.
அகதிகள் உரிமை ஆதரவாளர்கள் அரசாங்கத்திடம் என்ன கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்?
அஞ்சலின் ஷன்னன்: நான் சுமார் 20 ஆண்டுகளாக அகதிகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். தற்சமயம், civil society அமைப்புகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அகதிகள் மற்றும் புகலிடம் நாடுவோருக்கான அடிப்படை மனித உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர்.
அவற்றில் முக்கியமானவை கல்வி பெறும் உரிமை, வேலை செய்யும் உரிமை மற்றும் இலவச மருத்துவ சேவை பெறும் உரிமை.
பெரும்பாலான ரோஹிங்கியர்களுக்கு தாய்நாட்டிலேயே கல்வி மறுக்கப்பட்டது. இதனால் மலேசியாவில் எதிர்கொள்ளும் பல சவால்களை சமாளிக்க தேவையான அடிப்படை கல்வித் திறன்களும் அவர்களிடம் இல்லை.
ரோஹிங்கியா மற்றும் பிற அகதி குழந்தைகள் அரசு பள்ளிகளில் சேர அனுமதிக்கப்படுவதில்லை. எனவே ஆரம்ப மற்றும் அடிப்படை கல்வி வழங்கப்படுவது மிகவும் அவசியம். தனியார் பள்ளிகளின் செலவையும் அவர்கள் ஏற்க முடியாத நிலை உள்ளது.
முறையாக வேலைக்குச் செல்வதற்குத் தடை இருப்பதால், ரோஹிங்கியா அகதிகள் பெரும்பாலும் எந்தவித வேலைவாய்ப்பு உரிமைகளோ அல்லது பாதுகாப்புகளோ இன்றி முறைசாரா வேலைகளில் ஈடுபட வேண்டியுள்ளது. அவர்கள் அடிக்கடி சுரண்டப்படுகிறார்கள், மேலும் சில சமயங்களில் பல மாதங்கள் வேலை செய்த பின்னரும் சம்பளம் வழங்கப்படாத சூழ்நிலைகள் உள்ளன. வேலை செய்தபடி பிடிபட்டால் கைது மற்றும் தடுப்புக் காவலையும் சந்திக்க நேரிடும்.
தற்போது, அகதிகளின் அனைத்துப் பதிவுகளையும் நிறுத்திவிட்டு, தனது புதிய அகதிப் பதிவு ஆவணத் (DPP) திட்டத்தின் கீழ் தனது சொந்த அகதிப் பதிவைத் தொடங்குமாறு ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையத்திடம் (UNHCR) அரசாங்கம் கோரியுள்ளது. இது எங்களுக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது, ஏனெனில் இன்னும் ஆவணங்கள் இல்லாத புகலிடக் கோரிக்கையாளர்கள் குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ளனர்.
மியான்மர் அரசாங்கத்திடமிருந்து பாதுகாப்பு அல்லது சட்டப்பூர்வ குடியுரிமை வழங்குவதற்கான எந்த உத்தரவாதங்களையும் நாங்கள் கேள்விப்பட்டதில்லை. அப்படி எதுவும் இல்லை என்றே நாங்கள் சந்தேகிக்கிறோம். நிலைமை இப்படி இருந்து, நாடு கடத்தும் செயல் கட்டாயப்படுத்தப்பட்டால், மலேசிய அரசாங்கம் ரோஹிங்கியா மக்களின் இனப்படுகொலையை ஆதரிப்பதில் உடந்தையாகிவிடும்.
அகதிகளுக்காகப் பரிந்துரைப்பவர்களும் மனித உரிமை அமைப்புகளும் தங்கள் கவலைகளையும் எதிர்ப்புகளையும் வெளிப்படுத்தியுள்ளனர், ஆனால் மத்திய அரசாங்கத்திடமிருந்து எந்தப் பதிலோ அல்லது உறுதிமொழியோ வரவில்லை.
பாலஸ்தீனப் பிரச்சினைக்கு வெளிப்படையாக ஆதரவு அளிக்கப்படுவதற்கும், ரோஹிங்கியாப் பிரச்சினைக்கு அரசாங்கம் எந்த ஆதரவும் அளிக்காததற்கும் இடையே உள்ள அப்பட்டமான பாசாங்குத்தனத்தை அகதிகள் நல ஆர்வலர்களும் பிற அரசு சாரா அமைப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மாதவி மது: DPP பதிவு முறையானது அனைத்து அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோருக்காக உருவாக்கப்பட்டிருந்தாலும், ரோஹிங்கியா சமூகத்தின் மீதான விரோதப் போக்கு சமீபத்தில் அதிகரித்துள்ளதால், பல அமைப்புகள் பின்வரும் விடயங்களுக்குக் குறிப்பாக முக்கியத்துவம் அளிக்கின்றன:
ரோஹிங்கியா அகதிகளை வெறுப்புப் பேச்சு மற்றும் துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாத்தல்; அவர்கள் புகலிட நடைமுறைகள் மற்றும் UNHCR அல்லது DPP பதிவிற்கான அணுகலைத் தொடர்ந்து பெறுவதை உறுதி செய்தல்; அவர்களைத் தடுத்து வைப்பதையோ அல்லது மியான்மாருக்கு நாடு கடத்துவதையோ தடுத்தல்; மற்றும் DPP முறைக்கு மாறுவது அவர்களின் பாதுகாப்பைப் பலவீனப்படுத்தவோ அல்லது அவர்களை மேலும் பாகுபாட்டிற்கு உள்ளாக்கவோ செய்யாது என்பதை உறுதி செய்தல்.
தடுப்புக் காவலில் உள்ள 5,000 அகதிகளை மியான்மாருக்கு நாடுகடத்த அரசாங்கம் அறிவித்திருப்பது எங்களை மிகுந்த கவலையடையச் செய்கிறது. அங்கு இன்னும் உள்நாட்டு மோதல்கள் நடைபெற்று வருவதால் அது பாதுகாப்பான இடமல்ல.
மலேசியா 1951 அகதிகள் ஒப்பந்தத்தையோ அதன் 1967 நெறிமுறையையோ அங்கீகரிக்கவில்லை என்றாலும், “திருப்பி அனுப்பாமை” (non-refoulement) என்ற சர்வதேச சட்டக் கொள்கையை மதிக்க வேண்டிய கடமை அதற்குண்டு. இந்தக் கொள்கையின் படி, துன்புறுத்தல், சித்திரவதை, உயிருக்கு ஆபத்து அல்லது கடுமையான மனித உரிமை மீறல்கள் ஏற்படும் இடங்களுக்கு எவரையும் கட்டாயமாகத் திருப்பி அனுப்பக் கூடாது.
செய்தி: Green Left’s இணைய இதழ்
No comments:
Post a Comment