ஈப்போ: பிப்ரவரி 2
தேர்தலில் தோல்வி கண்டாலும், மக்கள் நலனுக்கான
அரசியலில் பிஎஸ்எம் கட்சி நாட்டில் நிலைத்தன்மையுடன் செயலாற்றி வருகிறது என மலேசியர்கள்
உணர தொடங்கிவிட்டனர். இனவாத அரசியல் என்பது தேசிய முன்னனி மற்றும் பக்காத்தான் ஹராப்பான்
கட்சிகளின் அரசியல் என்பதனை மக்கள் உணரத் தொடங்கியிருப்பதால் இன்னும் பத்தாண்டுகளில்
பிஎஸ்எம் மலேசிய அரசியலில் பிரதான கட்சியாக மிளிரும். பிஎஸ்எம் கட்சியின் ஆதரவின்றி
எந்தக் கட்சியும் அரசாங்கம் அமைக்க முடியாது என்ற நிலை ஏற்படுமென கட்சியின் தேசியத்
தலைவர் டாக்டர் ஜெயகுமார் தெரிவித்தார்.
பேராக் மாநில பிஎஸ்எம் கட்சியின் அலுவலகம்
ஈப்போவில் மேடான் இஸ்தானாவில் அதிகாரப்பூர்வ திறப்பு விழா நிகழ்வில் அவர் பேசினார்.
சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் 2018 தேர்தலில் ஆட்சி மாற்றத்தை பல எதிர்பார்ப்புகளுக்கு
மத்தியில் ஏற்படுத்தினர். பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் அமைக்கப்பட்டது. ஆனால்,
அது தேசிய முன்னணி பாணியில் ஆட்சி நடத்துவது கண்டு மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஆட்சி மாற்றம் என்பதைவிட யாரிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்பது முக்கியம் என்பதில்
மக்கள் விழிப்புணர்வு பெறத் தொடங்கிவிட்டனர்.
இனவாதம் மதவாதம் இவை இரண்டை மட்டுமே தேசிய
முன்னணி, பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிகள் தொடர்ந்து மூலத்தனமாக கொண்டு செயல்படுகின்றன.
இந்த நாட்டில் அதற்கு இடமில்லை. அனைத்து இன மக்களின் நலனுக்கும் அவர்களின் பாதிப்புகளுக்கும்
பாடுபட்டு போராட்டங்களை நடத்திவரும் ஒரே கட்சி பிஎஸ்எம் மட்டுமே. பிஎஸ்எம் கட்சியின்
கொள்கை உறுதிமிக்கது என டாக்டர் ஜெயகுமார் கூறினார்.
இந்நிகழ்வில் பிஎஸ்எம் கட்சியின் பேராக் மாநிலத்
தலைவர் கே.குணசேகரன், தேசிய நிலைப் பொறுப்பாளர்கள், அருட்செல்வன், சிவராஜன் உட்பட திரளானோர்
கலந்துக்கொண்டனர்.
செய்தியாளர் : எம்.ஏ.அலி
பத்திரிகை செய்தி : (மக்கள் ஓசை)
No comments:
Post a Comment