இந்திய அரசு சாரா நிறுவனங்கள் மற்றும்
அரசியல்வாதிகள் மத்தியில், ஆண்டுக்கு சுமார் RM100
மில்லியன் மித்ரா நிதி எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது அல்லது பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பது குறித்து
சிறிது பதட்டம் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், நாம் நம்மையே
முக்கியமாக கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால், மித்ரா-விற்கு
ஒதுக்கப்படும் நிதி நம் நாட்டிலுள்ள 20% ஏழை மக்களின் பிரச்சனையை நிவர்த்தி
செய்கிறதா?
நம் நாட்டில்
வாழும் B40 இந்தியர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் என்ன?
அவற்றில் சிலவற்றை பட்டியலிடுகிறேன் ...
1. குறைந்த மற்றும்
நிலையற்ற வருமானம்
பல B20 இந்தியர்கள் முறைசாரா துறையில், கட்டுமானம் மற்றும்
சேவைத் துறையில் தினசரி ஊதியம் பெறும் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும், பெரும்பாலும் குறைந்தபட்ச ஊதியத்தை விடவும் மிகக் குறைந்த ஊதியத்தில்
பணிபுரிகின்றனர். நாட்டில் அதிக எண்ணிக்கையிலான ஆவணமற்ற புலம்பெயர்ந்த
தொழிலாளர்கள் (அந்நிய தொழிலாளர்கள்) இருப்பதால், இந்தக்குழு
தொழிலாளர்களுக்கான ஊதியமும் அடிமட்டத்திற்குக் குறைந்துவிட்டது. உண்மையில், B20 மலாய்க்காரர்களும்
இதே பிரச்சனையைத்தான் எதிர்கொள்கின்றனர் - நிரந்தரமான வேலை கிடைப்பதில்லை, குறைந்த ஊதியம் மற்றும் முதலாளிகளுடன் பேரம் பேசும் பலமும் இல்லாத நிலை.
2. மலிவு விலை
வீடுகள் பற்றாக்குறை
நாட்டின் பல நகரங்களில் நகர முன்னோடிகளை குடியிருப்பிலிருந்து வெளியேற்றம் செய்து வருவதால், நகர்ப்புறங்களில் மலிவு விலை வீடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. உதாரணமாக, சுங்கை
சிப்புட் பகுதியில், பழைய மர வீடுகள் மாதம் RM 100-க்கு வாடகைக்கு கிடைக்கிறது.
அந்த வீடுகளும் ஓட்டையும் ஒழுக்கலுமாக இருக்கிறது. மழைக்காலத்தில்
சுற்றுப்புறம் நீர்க் குளமாகவும் சேறும் சகதியாகவும் மாறிவிடுகிறது. எனினும்,
அப்படித்தான் பி20 இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
காலப்போக்கில், நகர மறுசீரமைப்பு
திட்த்தின் கீழ், பி.பி.ஆர் (PPR) அடுக்குமாடி
குடியிருப்புகள் அல்லது மலிவு விலை தரை வீடுகளை அதிகரிக்க
தவறினால், அது பி20 இந்தியர்களுக்கு
மட்டுமல்ல மற்ற இன பி20 மக்களுக்கும் பெரும்
சிக்கலை உருவாக்கும்.
3. முதியோர் வறுமை
நீண்ட காலம் வாழ்வது, குறிப்பாக சிறுபான்மையினருக்கு சில நேரங்களில் வாழ்க்கை சாபமாகிவிடுகிறது.
அனைத்து இனங்களின் பி40 மக்களில், 50%-
க்கும் மேற்பட்டோர் சேமநிதி (EPF) சேமிப்புகளை
தொடக்கத்திலேயே வைத்திருக்கவில்லை. அவர்கள் முறைசாரா (informal) துறையில் வேலை செய்ததால் EPF-க்கு பங்களிப்பு
செய்யவில்லை. EPF சேமிப்புகளை வைத்திருந்த முன்னாள்
தொழிற்சாலை தொழிலாளர்களும், ஓய்வு பெற்ற 5 ஆண்டுகளுக்குள் அந்தச் சேமிப்புகளை முடித்துவிடுகின்றனர் – ஏனெனில்
அவர்களுடைய குறைந்த ஊதியங்களால் சேமிப்பு தொகை அதிகமாக இருக்காது. பி20 இந்திய முதியோர்களும் இந்த துரதிர்ஷ்டக் குழுவில் அடங்குகிறார்கள். பல
நேரங்களில், அவர்களது பிள்ளைகள் தங்கள் சொந்தக்
குடும்பத்தைக் காப்பாற்றிக்கொள்வதில் போராடிக்கொண்டிருப்பார்கள். அப்படி இருக்கும்
போது, குடும்பத்தின் முதிய உறுப்பினர்களுக்கு கொடுக்க,
பணம் அதிகம் எதுவும் மீதமிருப்பதில்லை.
இந்திய மக்களின் பி20 வறுமையின் உண்மையான காரணம்
பி20 இந்தியர்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகள் மேலே
பட்டியலிடப்பட்டுள்ளன. இவை இன அடிப்படையில் தோன்றியவையா? இல்லை.
பி20 பிரிவில் உள்ள மற்ற இனத்தவர்களும் இதே பிரச்சினைகளால்
பாதிக்கப்படுகிறார்கள். மேலும், இந்த கட்டமைப்பு சார்ந்த
பிரச்சினைகளை, வெறும் RM100 million MITRA நிதியால் யாரும் தீர்க்க முடியும் என எதிர்பார்க்க முடியுமா?
விஷயம் என்னவென்றால், மலேசியா ஒரு செழிப்பான நாடு. 13-வது மலேசிய திட்ட (RMK 13) தரவின்படி, 2024 ஆம் ஆண்டு மொத்த
தேசிய வருமானம் (GNI per capita) RM54,793 ஆக இருந்தது –
இதன் அடிப்படையில் பார்த்தால் நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு மாதாந்திர
வருமானம் RM18,264 ஆக இருக்க வேண்டும். ஆனால் நிஜத்தில்,
அனைத்து இனங்களின் பி20 குடும்பங்களின்
மாதாந்திர வருமானம் RM2,500 க்கும் குறைவாகவே உள்ளது.
மலேசியா போன்ற நாடுகளில் ஊதிய அழுத்தம் (wage suppression) மிகுந்த
அளவில் உள்ளது.
எங்கள்
தொழிலாளர்கள், “முன்னேறிய” நாடுகளில் அதே வேலை
செய்யும் தொழிலாளர்கள் பெறும் தொகையின் 1/8 பங்கையே
பெறுகின்றனர். இதற்குக் காரணம், எங்கள் பொருளாதாரம் உலகளாவிய
பொருளாதாரத்தில் இணைக்கப்பட்டுள்ள விதமாகும். தொழிற்சாலைகள் மற்றும் பிற வணிகங்களை
அமைக்க வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க நாங்கள் குறைந்த ஊதியங்கள் மற்றும்
குறைந்த உற்பத்திச் செலவுகளை நம்பியுள்ளோம். ஆசியான் (ASEAN) நாடுகள் மற்றும் உலக தெற்கிலுள்ள பிற நாடுகளுடனான கடுமையான போட்டியும்
எங்கள் தொழிலாளர்களின் ஊதியங்களை உயர்த்துவதில் பெரிய தடையாக இருக்கிறது.
நண்பர்களே, மலேசியாவில் வறுமைக்கு முக்கிய காரணம் இனம் சார்ந்தது
அல்ல என்பதில் தெளிவாக
இருக்க வேண்டும். அது சமூக-பொருளாதார அடிப்படையில் உள்ளது – அதாவது இந்த நாடு தனது
தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியத்தை வழங்காததே காரணம். ஆனால், பல குழுக்கள் – இந்தியர், மலாய் மற்றும் பிற
இனத்தவர்கள் – இந்த சமூக-பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு இன அடிப்படையிலான
தீர்வுகளைத் தேடுகின்றனர், ஆனால் இவை நாட்டின் அனைத்து
தொழிலாளர்களையும் பாதிக்கின்றன.
நாம் இந்த விடயத்தில் தெளிவாக இருக்க
வேண்டும். சரியான பகுப்பாய்வு செய்யாவிட்டால், நாம் முக்கியமில்லாத விஷயங்களில் (எ.கா. MITRA நிதியின்
பெரும் பகுதி பகிரப்படவில்லை என்பதுபோல்) கவனம் செலுத்திக்கொண்டிருப்போம். அதே
சமயம், நாட்டின் வருமானப் பகிர்வு சமமின்மையைத் தீர்க்கத்
தேவையான கூட்டணிகளை உருவாக்க முடியாமல் தவறிவிடுவோம்.
ஏன் SEDIC / MITRA?
நான் இங்கே வெளிப்படையாகச் சொல்லலாமா? முதலில், டி.எஸ். நஜிப்
மித்ராவை ( SEDIC என) சுமார் 10 ஆண்டுகளுக்கு
முன்பு ஏன் அறிமுகப்படுத்தினார்? என் கருத்துப்படி, இந்திய ஆர்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு அவ்வப்போது நிதி
வழங்குவதன் மூலம் அவர்களை ஹிண்ட்ராப்பிலிருந்து விலக்கி, ஆளும்
அரசாங்கத்துடன் இணைக்க இது ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கை. இது ஒருபோதும் B20
இந்திய மக்களை மேம்படுத்துவதற்காக அல்ல. செயலில் உள்ள இந்திய
இளைஞர்களில் ஒரு பகுதியை வெல்வதற்கும், எதிர்ப்பைக்
குறைப்பதற்கும் இது ஒரு அரசியல் சூழ்ச்சி. ஆண்டுதோறும் RM50,000 அல்லது RM100,000 க்கு விண்ணப்பிக்க நினைத்தால்,
NGOக்கள் அரசாங்கத்தை விமர்சிப்பதில் கவனமாக இருக்க வேண்டும்!
தற்போது “மடானி அரசு” இந்த MITRA நிதியை வழங்குகிறது. அதன் அரசியல் நோக்கம்
மாறிவிட்டதாக நீங்கள் நம்புகிறீர்களா?
மேலும்,
MITRA நிதியால் நடத்தப்படும் சில திட்டங்கள் உண்மையில் பயனுள்ளவையாக
இருந்தாலும், பல திட்டங்கள், அவற்றால்
உதவப்படுவதாகக் கூறப்படும் “மக்களை” விட, அவற்றை நடத்தும்
தன்னார்வ அமைப்புகளுக்கே அதிக நன்மையை அளிக்கின்றன.
இனப்பிரச்சினைகளால் வறுமை மேலும்
தீவிரமாகிறது
மேலே நான் குறிப்பிட்டது போல, பி20 இந்தியர்களின் வறுமையின்
முக்கிய காரணம் சமூக-பொருளாதார அடிப்படையிலேயே உள்ளது, இன
அடிப்படையில் அல்ல. இது உண்மை தான், ஆனால் சிறிது விளக்கப்பட
வேண்டியதாக உள்ளது. இன்னும் துல்லியமாகச் சொல்வதானால், பி20
இந்தியர்களின் வறுமைக்கு சுமார் 80% காரணம்
சமூக-பொருளாதார காரணங்களும், மீதமுள்ள 20% காரணம் இன அடிப்படையிலான பாகுபாடுகளும் ஆகும்.
உதாரணம்: பி20 இந்தியர்களில் குடியுரிமையில்லாமை (statelessness)
அதிகமாக இருப்பது, அவர்களின் பொருளாதார
பிரச்சினைகளை உருவாக்கும் அல்லது தீவிரப்படுத்தும் முக்கிய இன அடிப்படையிலான
காரணங்களில் ஒன்று. (சபாவில் உள்ள சுலு இனத்தவரும் சில சிறுபான்மை குழுக்களையும்
தவிர, இது மற்ற சமூகங்களைவிட அதிகம்.) மலேசியாவில் பிறந்த
பெற்றோரின் பிள்ளைகளாக இருந்தும், ஆயிரக்கணக்கான
இந்தியர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை இல்லை. இதற்கு காரணம்
பெரும்பாலும் பெற்றோரின் கவனக்குறைவு, அறியாமை, அக்கறையின்மை ஆகியவையாகும், ஆனால் அதன் விளைவுகள்
மிகக் கடுமையானவை. அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. முறையான வேலை (formal
sector) செய்ய முடியாது. சுகாதார சேவைகள் பெறுவதும் சிரமமாகிறது.
அவர்களது பிள்ளைகளும் குடியுரிமையற்றவர்களாகி விடும் அபாயம் அதிகம்.
துரதிர்ஷ்டவசமாக, தேசிய பதிவுத்துறை (JPN) மிகக் கடுமையான நடைமுறைகளை பின்பற்றுவதால், தேவையான
ஆவணங்களைப் பெறுவது அரிதாகிறது.
தீர்வு: குடியுரிமையற்றவர்களுக்கு
உதவுவதற்காக, MITRA நிதியின் ஒரு பகுதியை
பிறப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை தொடர்பான பிரச்சினைகளை கையாளும்
செயற்பாட்டாளர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளை (NGO) பயிற்றுவிக்கவும்
ஆதரிக்கவும் பயன்படுத்தலாம். அதேபோல DNA பரிசோதனைகளுக்கான
செலவுகளை ஏற்றுக்கொள்ளவும், நீதித்துறை மறுஆய்வு (Judicial
Review) வழக்குகள் தொடர்வதற்கு சட்ட உதவி அளிக்கவும் செய்யலாம்.
மற்றொரு இன அடிப்படையிலான பிரச்சினை
என்னவெனில், பி20 இந்தியர்கள்
அரசாங்கப் பணிகளில் சேர்வதில் சந்திக்கும் சிரமம். அரசாங்கப் பணிகளில் நியாயமான
வாய்ப்பு அளித்தால், வேலைஇல்லாமை அல்லது குறைவான வேலை (underemployment)
பிரச்சினையை முழுமையாகத் தீர்க்க முடியாது, ஏனெனில்
அரசாங்க வேலைகள் நாட்டின் மொத்த வேலைவாய்ப்பில் சுமார் 10% மட்டுமே.
ஆனால், இந்தியர்கள் தங்களின் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ற
அளவு அரசாங்கப் பணிகளைப் பெற்றால் அது உதவியாக இருக்கும். உதாரணமாக பேராக்
மாநிலத்தில் இந்தியர்களின் மக்கள் தொகை விகிதம் சுமார் 16% ஆக
இருக்கிறது. எனவே, அரசாங்கப் பணிகளில் 16% ஆட்கள் இந்தியர்களாக இருக்க வேண்டும் என்று கோருவது நியாயமானதே.
இந்திய B20 வறுமையை இனம் மோசமாக்குவதற்கான மற்றொரு
எடுத்துக்காட்டு, பூமிபுத்ரா மாணவர்களுக்காக
அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புப் பள்ளிகள், ஜூனியர்
கல்லூரிகள், உதவித்தொகைகள் மற்றும் பிற உறுதிமொழி
நடவடிக்கைத் திட்டங்கள் போன்ற கல்வித் திட்டங்களில் ஏழை இந்திய குடும்பங்களைச்
சேர்ந்த மாணவர்களைச் சேர்க்க அரசாங்கம் தயக்கம் காட்டுவது.
வாய்ப்புகளை அபகரித்தல்
இருப்பினும், இன அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்ட அனைத்து உறுதியான
நடவடிக்கைகளுக்கும் இருக்க வேண்டியது போல, B20 இந்தியர்கள்
இந்தியர்களுக்கு வழங்கப்படும் அரசு வேலைகள் மற்றும் கல்வி வாய்ப்புகளில் குறைந்தது
20% பெறுவதை உறுதி செய்ய போதுமான கவனம் செலுத்தப்பட
வேண்டும். பெரும்பாலும் நடப்பது என்னவென்றால், ஒரு
குறிப்பிட்ட இனக்குழுவில் வறுமையின் அடிப்படையில் பெறப்பட்ட இன ஒதுக்கீடுகள்,
பெரும்பாலும் அந்த இனக்குழுவின் மிகவும் வசதியான உறுப்பினர்களால்
அனுபவிக்கப்படுகின்றன. இந்தப் போக்கு இந்திய சமூகத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை.
பூமிபுத்ரா சமூகங்களும் இந்த சமூக நோயால் மோசமாகப் பாதிக்கப்படுகின்றன. அரசாங்கத்தின் பல நிலைகளில் நடைபெறும் வேலை ஆட்பதிவு
செயல்முறைகளை தொடர்ந்து கண்காணித்து, குறிப்பாக பி40 இந்தியர்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்வதற்கான
முயற்சிக்கு MITRA நிதி ஒதுக்கப்படுவது சிறந்ததாக இருக்கும்.
நாம் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டாமா?
B20 இந்தியர்களின் நிலை குறித்து
நாம் தீவிரமாகக் கவலைப்படுகிறோம் என்றால், B20 இனத்தவரின்
வறுமை குறித்து அக்கறை கொண்ட பிற (இந்தியரல்லாத) ஆர்வலர்கள் மற்றும் அரசு சாரா
நிறுவனங்களுடன் இணைந்து, நியாயமற்ற சமூக-பொருளாதார
கட்டமைப்புகளை கூட்டாக நிவர்த்தி செய்ய வேண்டும், அல்லவா?
ஏனெனில், இந்த அநியாயமான சமூக-பொருளாதார
அமைப்புகள் பெரும்பாலும் மிகச் சக்திவாய்ந்த, சமூகத்தின்
மேலே உள்ள 5% பேருக்கு மட்டுமே பலனளிக்கின்றன. எனவே, இந்த நாட்டில் உருவாகும் செல்வம் சற்றே
சமமாகப் பகிரப்படும் வகையில், பொருளாதாரத்தை மறுசீரமைக்க
தேவையான பன்முக இன மக்கள் சக்தியை உருவாக்க, மற்ற
மலேசியர்களுடன் சேர்ந்து செயல்படுவது மிகவும் அவசியமாகிறது.
டாக்டர் ஜெயகுமார் தேவராஜ்
மலேசிய சோசலிசக் கட்சியின் தேசியத்
தலைவர்
(12/9/2025)