Tuesday, September 30, 2025

எங்கள் குழந்தைகளை பசியால் தவிக்க விடாதீர்கள்!

 பி.எஸ்.எம் பத்திரிக்கை  அறிக்கை 



– 1 அக்டோபர் 2025

சமீபத்தில் கல்வி அமைச்சு (MoE) மற்றும் சுகாதார அமைச்சு (MoH) எடுத்த முடிவின் படி, பள்ளிகளில் தின்பண்டங்கள் மற்றும் இனிப்பு பானங்கள் விற்பனை செய்வது அதிகாரப்பூர்வமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.  junk food என்று சொல்லக்கூடிய  தின்பண்ட உணவுகள் தீங்கு விளைவிப்பவை என்பதை மறுக்க முடியாது. ஆனால், மலேசிய சோசலிசக் கட்சியின் இளைஞர் பிரிவு கருதுவது என்னவெனில்,  இந்தத் தடை தவறான வழிகாட்டுதலும் தந்தைவழிச் சிந்தனையும் கொண்ட நடவடிக்கையாகத் தோன்றுகிறது என்றும், அரசாங்கம் ஒரு குழந்தையின் ஆரோக்கியமான உணவுக்கான அடிப்படை உரிமையை உத்தரவாதம் செய்யத் தவறியதற்காகக் குழந்தைகள்  தண்டிக்க பட்டிருக்கிறார்கள் என்றும் பி.எஸ்.எம் இளைஞர் பிரிவு கண்டறிந்துள்ளனர்.


சோசலிச இளைஞர்கள் வலியுறுத்துவது என்னவெனில், இச்சூழ்நிலையில் அடிப்படை பிரச்சினை என்பது ஆரோக்கியமான உணவுகள் எளிதில் கிடைக்காததும், கிடைத்தாலும் அதற்கான  விலை அதிகமாக இருப்பதுமே ஆகும். மக்களின் ஊதியம் வாழ்க்கைச் செலவுகளுடன் பொருந்தாத பொருளாதார நிலையில், பசுமையான சத்தானதுமான உணவு பலரால் அனுபவிக்க முடியாத ஓர் ஆடம்பரமாக மாறியுள்ளது. இந்தத் தடை குழந்தைகளை பசியுடன் விட்டு விடுகிறது, ஏனெனில் பெற்றோரின் செலவுக்கு ஏற்ற விருப்பங்களை, அரசு நீக்கத் தேர்வு செய்தாலும், உண்மையான தீர்வை அது வழங்குவதில்லை. இந்தத் தடை குழந்தைகளை பசியுடன் விட்டு விடுகிறது. மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய குறைந்த விலை உணவை அகற்றிவிட்டு, அதற்கு மாறான  உண்மையான தீர்வை அரசு வழங்குவதில்லை.

மலேசியா தற்போது இருமடங்கு ஊட்டச்சத்து சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது, குழந்தைகளில் போஷாக்குறை மற்றும் அதிக உடல் எடை/உடல் பருமன் ஆகிய இரண்டு பிரச்னைகளும் பக்கப்பக்கமாகவே காணப்படுகின்றன.இவை இரண்டும் ஒரே காரணத்திலிருந்து உருவாகின்றன – வறுமை மற்றும் உணவு பாதுகாப்பின்மை. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் வளர்ச்சி குறைபாடு (stunting) 2015-இல் 17.7% இருந்த நிலையில், அதிர்ச்சிகரமாக 2022-இல் 21.2% ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் உடல் பருமன் 6.0% ஆக உயர்ந்துள்ளது. மேலும், பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு மூன்று குழந்தைகளில் ஒருவர் தற்போது அதிக எடை அல்லது பருமனுடன் உள்ளார் என்பதும் மிகப் பதற்றமூட்டும் நிலையாகும்.

இந்த ஆண்டு மே மாதத்தில், பிரதமர் துறையின் (கூட்டரசு பிரதேசங்கள்) அமைச்சரான Datuk Seri Dr Zaliha Mustafa, குடும்பத்தின் பொருளாதாரச் சுமையால் குழந்தைகள் கல்வி கற்பதிலிருந்து விட்டு விலகி, குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக வேலைக்குச் செல்லும் நிலை உருவாகியிருக்கிறது என்று குறிப்பிட்டார்.

உலகளாவிய இலவச பள்ளி உணவுத் திட்டம் இந்தப் பிரச்சினையைத் தடுக்கும் வகையில் பயனுள்ளதாக இருக்கும். இது பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பத் தூண்டும் வகையில் ஊக்கமாகச் செயல்படும். இதன் மூலம் குழந்தைகள் கற்றலும் வளர்ச்சியும் அடைய தேவையான உணவுச்சத்தைக் கிடைக்க வழி செய்யும், அதே நேரத்தில் வறுமையில் இருக்கும் குடும்பங்களின் நிதி அழுத்தத்தைக் குறைக்கிறது. அமைப்பு ரீதியான  தோல்வியால் உருவான சுமையை பெற்றோர்கள் தங்களின் தோளில் சுமக்க வேண்டிய நிலை உருவாகக் கூடாது.

கல்வி அமைச்சகம் மீண்டும் இலவச காலை உணவு திட்டத்தை (PSP) செயல்படுத்தி, அனைத்து குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான காலை உணவை வழங்க வேண்டும் என சோசலிச இளைஞர்களான நாங்கள் அமைச்சிடம்  கோரிக்கை வைக்கிறோம். 


எழுதியவர்:  அமண்டா சுவேதா லூயிஸ்

மலேசிய சோசலிசக் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர்

Monday, September 29, 2025

புதிய தனியார் மருத்துவமனைகளை திறப்பதை நிறுத்துக!

 PSM பத்திரிகை செய்தி – 29 செப்டம்பர் 2025 -


நாட்டின் சுகாதாரத் துறையில் சமீபத்திய முன்னேற்றங்கள்  என்ற போர்வையில் பெரிய நிறுவனங்கள் தங்கள் தனியார் மருத்துவமனை சாம்ராஜ்யங்களை விரிவுபடுத்தி வருகின்றன. இது  குறித்து மலேசிய சோசலிசக் கட்சி (PSM)   தமது வருத்தத்தை  தெரிவித்துக் கொள்கிறது. 

4.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (RM18.1 பில்லியன்) மதிப்புள்ள ஜெஃப்ரி சியாவுக்குச் சொந்தமான சன்வே ஹெல்த்கேர் ஹோல்டிங்ஸ், ஜோகூரில் உள்ள இஸ்கண்டார்  புத்திரியில் ஒரு புதிய மருத்துவமனையைக் கட்டுவது உட்பட RM1.6 பில்லியன் மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டத்திற்கு நிதியளிக்க ஆரம்ப பொது தரகு (IPO)க்கான திட்டங்களை சமீபத்தில் அறிவித்தது.


கடந்த மாதம், 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (RM8 பில்லியன்) மதிப்புள்ள சிங்கப்பூரர் பீட்டர் லிம்முக்குச் சொந்தமான தாம்சன் மருத்துவக் குழுமம், ஜோகூரில் ஒரு பெரிய அளவிலான தனியார் மருத்துவமனையைக் கட்டுவதை உள்ளடக்கிய RM18 பில்லியன் மதிப்பிலான மிகப்பெரிய திட்டத்தையும் அறிவித்தது.  Forbes இன் கூற்றுப்படி, தாம்சன்  இஸ்கந்தரியா மருத்துவமனை  பெரிய அளவில் திட்டமிடப்படுள்ளது.  முதல் கட்டத்தில் 500 படுக்கைகள் கொள்ளளவுடன் தொடங்கி, பின்னர் 1,000 படுக்கைகள் வரை விரிவாக்கப்படக்கூடிய மிகப்பெரிய மருத்துவமனையாக அது  இருக்கும்.

இந்த நிலைமை மிகுந்த கவலைக்குரியது.  அரசாங்கம் உடனடியாக குறைந்தபட்சம் அடுத்த 5 ஆண்டு காலத்திற்கு புதிய தனியார் மருத்துவமனைகள் தொடங்குவதற்கு தற்காலிகத் தடையுத்தரவு (moratorium) விதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை PSM வலியுறுத்துகிறது.

 நமது அரசு மருத்துவமனைகளில் நிபுணத்துவ மருத்துவர்கள் பற்றாக்குறையை எதிர்கொண்டிருக்கிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள நிபுணர்களில் 70% பேர் இப்போது தனியார் துறையில் உள்ளனர், அதே நேரத்தில் வார்டுகளில் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளில் 70% பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவ நிபுணர் பற்றாக்குறை என்பது அரசாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, பொதுமக்களாலும் நன்கறியப்பட்ட பிரச்சினையாகும்.

ஒவ்வொரு முறையும் புதிய தனியார் மருத்துவமனை ஒன்று தொடங்கப்படும் போது, அரசு மருத்துவமனைகளில் இருந்து நிபுணத்துவ மருத்துவர்கள் வெளியேறும் நிகழ்வு ஏற்படுகிறது. உதாரணமாக, சமீபத்தில் தொடங்கப்பட்ட சன்வே மெடிக்கல் செண்டர் (ஈப்போ) நிர்வாகம், முதல் ஆண்டுக்கான சேவைக்காக மாதம் RM70,000 வரை வழங்கப்படும் “டாப் அப்” திட்டத்தின் மூலம், அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்த 12 நிபுணர் மருத்துவர்களை வெற்றிகரமாக நியமித்துள்ளது. இவ்வாறான கவர்ச்சிகரமான அல்லது இலாபகரமான சலுகைகள், மனிதவள பற்றாக்குறையை எதிர்கொள்ளும் அரசு மருத்துவமனைகளிலிருந்து நிபுணர்களை ஈர்க்கும் என்பது திண்ணம்.

இந்த நிலைமை ஏற்கனவே அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்காக காத்திருக்கும் காலத்தை நீட்டித்து நோயாளிகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், புதிய தனியார் மருத்துவமனைகளைத் திறப்பது சுகாதார அமைப்பு எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மேலும் மோசமாக்கும்.


இந்த நெருக்கடியான சூழ்நிலையில் PSM வலியுறுத்துவது என்னவெனில், அரசின் முழு கவனம் நிபுணர்களை அரசுப் பணியில் நிலைநிறுத்துவதில்தான் இருக்க வேண்டும்; பொதுமக்களின் சுகாதார அமைப்பிலிருந்து நிபுணர்களை “கவர்ந்து” சென்று லாபம் ஈட்டுவதற்கு தனியார் துறைக்கு அனுமதி அளிப்பதில் அல்ல.   மேலும், நிபுணர்களை அரசுத் துறையில் நிலைநிறுத்துவதற்கான தீர்வாக அரசு skim Rakan KKM திட்டத்தை முன்வைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் உண்மையில், skim Rakan KKM  திட்டம் ஒரு தீர்வு இல்லை, மாறாக நிலைமையை மேலும் மோசமாக்கும்.

சுகாதாரம் என்பது மக்களின் உரிமை, அது வணிகப் பொருள் அல்ல. மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறை பிரச்சினையை உண்மையிலேயே தீர்க்கவும், பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்தவும் சுகாதார அமைச்சகத்திற்கான ஆண்டு ஒதுக்கீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% ஆக அரசாங்கம் அதிகரிக்க வேண்டும்.


எழுதியவர்:  

காந்திபன் நந்த கோபாலன் 

மலேசிய சோசலிசக் கட்சி 

மத்திய செயற்குழு உறுப்பினர்

Tuesday, September 23, 2025

யூசோப் மாமத்துக்கு விழிப்புணர்வு வகுப்பை நடத்த PSM தயார்

PSM பத்திரிகை செய்தி – 24 செப்டம்பர் 2025 

குழந்தைகளை பலியாக்க வேண்டாம்;

யூசோப் மாமத்துக்கு  விழிப்புணர்வு வகுப்பை நடத்த PSM தயார்:


தோழர் கேசவன் பார்வதி


பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களும் சட்டப்பூர்வமாக குற்றம் சாட்டப்பட வேண்டும் என்று விரும்பும் கிளந்தான் காவல்துறைத் தலைவரின் முன்மொழிவை PSM கடுமையாகக் கண்டிக்கிறது. இந்த முன்மொழிவு சட்டம், நீதி மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானது.

சட்டம் மிகத் தெளிவாகச் சொல்லுகிறது – 16 வயதிற்குக் குறைவான குழந்தைகள் எந்த நிலையிலும் பாலியல் உறவுக்கு சம்மதம் அளிக்க முடியாது. அவர்கள் “ஆம் என்று சொன்னாலும் கூட, சட்டத்தின் பார்வையில் அது “இல்லை என்று தான் கருதப்படும். இந்தச் சட்டப்பிரிவு உருவாக்கப்பட்டதன் நோக்கம், குழந்தைகளை பெரியவர்களால் சுரண்டுவதைத் தடுக்குவதற்காகவே. ஏனெனில் குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள், எளிதில் ஏமாற்றப்படக்கூடியவர்கள். குறிப்பாக பாலியல் சூழ்ச்சி (child grooming) மூலம் ஏமாற்றப்படுவது, அல்லது பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இடையிலான அதிகார அசமத்துவம் (power imbalance) காரணமாக குழந்தைகள் தங்களைப் பாதுகாக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவது ஆகியவற்றைத் தடுக்கிறது.

ஒரு குழந்தை அல்லது இளம்பெண்கள்/இளைஞர்கள் மீது வழக்கு தொடர வேண்டும் என்ற பரிந்துரை நடைமுறைக்கு வந்துவிட்டால், பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க பயப்படுவார்கள். “நீ புகார் செய்தால் உனக்கும் வழக்கு தொடரப்படும் என்று மிரட்டக்கூடிய சூழல் உருவாகும். இதனால் குற்றம் புரிந்த பெரியவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். இறுதியில், நாம் குழந்தைகள் (பாதிக்கப்பட்டவர்கள்) பாதுகாப்பை உறுதி செய்ய முடியாமல் தோல்வியடைந்து விடுவோம்.

Statutory பாலியல் வல்லுறவு (Statutory Rape) என்பது மிகத் தெளிவாக வலியுறுத்துகிறது. குழந்தையுடன் பாலியல் உறவு கொள்வது, குழந்தை சம்மதித்தாரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், குற்றமாகவே கருதப்படும். இது பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ஆண் குழந்தைகளுக்கும் சமமாகப் பொருந்தும்.

யூசுப் மமாத் முன்வைத்துள்ள பரிந்துரை ஒரு அபாயகரமான ‘பாதிக்கப்பட்டவரையே குற்றம் சாட்டும் (victim blaming) அணுகுமுறையாகும். ஏனெனில் அது, பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இடையே உள்ள ‘பாலியல் சூழ்ச்சி (Child Grooming) மற்றும் ‘அதிகார அசமத்துவம் (Power imbalance) ஆகியவற்றின் நிஜத்தை முற்றிலும் புறக்கணிக்கிறது. குழந்தைகள் வயது மற்றும் உடல் ரீதியாக பெரியவர்களுடன் சமமாக இல்லாதவர்கள் மட்டுமல்ல, அவர்கள் உளவியல் ரீதியாகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள்.

நாங்கள் வலியுறுத்துவது என்னவென்றால் – பாதிக்கப்பட்டவர்கள் (மக்கள்) தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல, அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். சட்ட அமலாக்கத்தின் கவனம் எப்போதும் குற்றம் புரியும் பெரியவர்கள்மீதே இருக்க வேண்டுமே தவிர பாதிக்கப்பட்டவர்கள்மீது சுமையை மாற்றுவதல்ல. குழந்தைகள் உரிமைகள் தொடர்பான மாநாட்டை (CRC) அங்கீகரித்த ஒரு நாடாக, மலேசியா, அனைத்து குழந்தைகளையும் பாலியல் சுரண்டலில் இருந்து பாதுகாக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது.

யூசுப் மமாத் உண்மையிலேயே இந்தச் சிக்கலைப் புரிந்துகொள்ள விரும்பினால், ‘பாலியல் சூழ்ச்சி (child grooming) மற்றும் ‘அதிகார அசமத்துவம் (power imbalance) பற்றிய விழிப்புணர்வு வகுப்புகளை நடத்துவதற்கு PSM தயாராக உள்ளது. இதன் மூலம் காவல்துறை அதிகம் விழிப்புணர்வுடன் இருந்து, இனி குழந்தைகள் (பாதிக்கப்பட்டவர்கள்) உயிருக்கு ஆபத்தான பரிந்துரைகளை முன்வைக்காமல் இருக்கலாம்.

 

எழுதியவர்: கேசவன் பார்வதி

Friday, September 12, 2025

மித்ரா நிதி இந்தியர்களின் வறுமையைத் தீர்க்குமா? PSM அறிக்கை


இந்திய அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில், ஆண்டுக்கு சுமார் RM100 மில்லியன் மித்ரா நிதி எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது அல்லது பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பது குறித்து சிறிது பதட்டம் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், நாம் நம்மையே முக்கியமாகேட்க வேண்டிய கேள்வி  என்னவென்றால், மித்ரா-விற்கு ஒதுக்கப்படும் நிதி நம் நாட்டிலுள்ள 20% ஏழை மக்களின் பிரச்சனையை நிவர்த்தி செய்கிறதா?

நம் நாட்டில் வாழும் B40 இந்தியர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் என்ன? 

அவற்றில் சிலவற்றை பட்டியலிடுகிறேன் ...

1. குறைந்த மற்றும் நிலையற்ற வருமானம்

பல B20 இந்தியர்கள் முறைசாரா துறையில், கட்டுமானம் மற்றும் சேவைத் துறையில் தினசரி ஊதியம் பெறும் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும், பெரும்பாலும் குறைந்தபட்ச ஊதியத்தை விடவும் மிகக் குறைந்த ஊதியத்தில் பணிபுரிகின்றனர். நாட்டில் அதிக எண்ணிக்கையிலான ஆவணமற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (அந்நிய தொழிலாளர்கள்) இருப்பதால், இந்தக்குழு தொழிலாளர்களுக்கான ஊதியமும் அடிமட்டத்திற்குக் குறைந்துவிட்டது.  உண்மையில், B20 மலாய்க்காரர்களும் இதே பிரச்சனையைத்தான் எதிர்கொள்கின்றனர் - நிரந்தரமான வேலை கிடைப்பதில்லை, குறைந்த ஊதியம் மற்றும் முதலாளிகளுடன் பேரம் பேசும் பலமும் இல்லாத நிலை.  

2. மலிவு விலை வீடுகள் பற்றாக்குறை

நாட்டின் பல நகரங்களில் நகர முன்னோடிகளை குடியிருப்பிலிருந்து வெளியேற்றம் செய்து வருவதால், நகர்ப்புறங்களில் மலிவு விலை வீடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. உதாரணமாக, சுங்கை சிப்புட் பகுதியில், பழைய மர வீடுகள் மாதம் RM 100-க்கு வாடகைக்கு கிடைக்கிறது. அந்த வீடுகளும் ஓட்டையும் ஒழுக்கலுமாக  இருக்கிறது. மழைக்காலத்தில் சுற்றுப்புறம் நீர்க் குளமாகவும் சேறும் சகதியாகவும் மாறிவிடுகிறது. எனினும், அப்படித்தான் பி20 இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

காலப்போக்கில், நகர மறுசீரமைப்பு திட்த்தின் கீழ், பி.பி.ஆர் (PPR) அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது மலிவு விலை தரை வீடுகளை அதிகரிக்க தவறினால், அது பி20 இந்தியர்களுக்கு மட்டுமல்ல மற்ற இன பி20 மக்களுக்கும் பெரும் சிக்கலை உருவாக்கும்.

 

3. முதியோர் வறுமை

நீண்ட காலம் வாழ்வது, குறிப்பாக சிறுபான்மையினருக்கு  சில நேரங்களில் வாழ்க்கை சாபமாகிவிடுகிறது. அனைத்து இனங்களின் பி40 மக்களில், 50%- க்கும் மேற்பட்டோர் சேமநிதி (EPF) சேமிப்புகளை தொடக்கத்திலேயே வைத்திருக்கவில்லை. அவர்கள் முறைசாரா (informal) துறையில் வேலை செய்ததால் EPF-க்கு பங்களிப்பு செய்யவில்லை. EPF சேமிப்புகளை வைத்திருந்த முன்னாள் தொழிற்சாலை தொழிலாளர்களும், ஓய்வு பெற்ற 5 ஆண்டுகளுக்குள் அந்தச் சேமிப்புகளை முடித்துவிடுகின்றனர் – ஏனெனில் அவர்களுடைய குறைந்த ஊதியங்களால் சேமிப்பு தொகை அதிகமாக இருக்காது. பி20 இந்திய முதியோர்களும் இந்த துரதிர்ஷ்டக் குழுவில் அடங்குகிறார்கள். பல நேரங்களில், அவர்களது பிள்ளைகள் தங்கள் சொந்தக் குடும்பத்தைக் காப்பாற்றிக்கொள்வதில் போராடிக்கொண்டிருப்பார்கள். அப்படி இருக்கும் போது, குடும்பத்தின் முதிய உறுப்பினர்களுக்கு கொடுக்க, பணம் அதிகம் எதுவும் மீதமிருப்பதில்லை.

இந்திய மக்களின் பி20 வறுமையின் உண்மையான காரணம்

பி20 இந்தியர்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகள் மேலே பட்டியலிடப்பட்டுள்ளன. இவை இன அடிப்படையில் தோன்றியவையா? இல்லை. பி20 பிரிவில் உள்ள மற்ற இனத்தவர்களும் இதே பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், இந்த கட்டமைப்பு சார்ந்த பிரச்சினைகளை, வெறும் RM100 million MITRA நிதியால் யாரும் தீர்க்க முடியும் என எதிர்பார்க்க முடியுமா?

விஷயம் என்னவென்றால், மலேசியா ஒரு செழிப்பான நாடு. 13-வது மலேசிய திட்ட (RMK 13) தரவின்படி, 2024 ஆம் ஆண்டு  மொத்த தேசிய வருமானம் (GNI per capita) RM54,793 ஆக இருந்தது – இதன் அடிப்படையில் பார்த்தால் நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு மாதாந்திர வருமானம் RM18,264 ஆக இருக்க வேண்டும். ஆனால் நிஜத்தில், அனைத்து இனங்களின் பி20 குடும்பங்களின் மாதாந்திர வருமானம் RM2,500 க்கும் குறைவாகவே உள்ளது. மலேசியா போன்ற நாடுகளில் ஊதிய அழுத்தம் (wage suppression) மிகுந்த அளவில் உள்ளது.  

 எங்கள் தொழிலாளர்கள், “முன்னேறிய” நாடுகளில் அதே வேலை செய்யும் தொழிலாளர்கள் பெறும் தொகையின் 1/8 பங்கையே பெறுகின்றனர். இதற்குக் காரணம், எங்கள் பொருளாதாரம் உலகளாவிய பொருளாதாரத்தில் இணைக்கப்பட்டுள்ள விதமாகும். தொழிற்சாலைகள் மற்றும் பிற வணிகங்களை அமைக்க வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க நாங்கள் குறைந்த ஊதியங்கள் மற்றும் குறைந்த உற்பத்திச் செலவுகளை நம்பியுள்ளோம். ஆசியான் (ASEAN) நாடுகள் மற்றும் உலக தெற்கிலுள்ள பிற நாடுகளுடனான கடுமையான போட்டியும் எங்கள் தொழிலாளர்களின் ஊதியங்களை உயர்த்துவதில் பெரிய தடையாக இருக்கிறது.

நண்பர்களே, மலேசியாவில் வறுமைக்கு முக்கிய காரணம் இனம் சார்ந்தது அல்ல என்பதில்  தெளிவாக இருக்க வேண்டும். அது சமூக-பொருளாதார அடிப்படையில் உள்ளது – அதாவது இந்த நாடு தனது தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியத்தை வழங்காததே காரணம். ஆனால், பல குழுக்கள் – இந்தியர், மலாய் மற்றும் பிற இனத்தவர்கள் – இந்த சமூக-பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு இன அடிப்படையிலான தீர்வுகளைத் தேடுகின்றனர், ஆனால் இவை நாட்டின் அனைத்து தொழிலாளர்களையும் பாதிக்கின்றன.

நாம் இந்த விடயத்தில் தெளிவாக இருக்க வேண்டும். சரியான பகுப்பாய்வு செய்யாவிட்டால், நாம் முக்கியமில்லாத விஷயங்களில் (எ.கா. MITRA நிதியின் பெரும் பகுதி பகிரப்படவில்லை என்பதுபோல்) கவனம் செலுத்திக்கொண்டிருப்போம். அதே சமயம், நாட்டின் வருமானப் பகிர்வு சமமின்மையைத் தீர்க்கத் தேவையான கூட்டணிகளை உருவாக்க முடியாமல் தவறிவிடுவோம்.

ஏன்  SEDIC / MITRA?

நான் இங்கே வெளிப்படையாகச் சொல்லலாமா? முதலில், டி.எஸ். நஜிப் மித்ராவை ( SEDIC என) சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏன் அறிமுகப்படுத்தினார்? என் கருத்துப்படி, இந்திய ஆர்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு அவ்வப்போது நிதி வழங்குவதன் மூலம் அவர்களை ஹிண்ட்ராப்பிலிருந்து விலக்கி, ஆளும் அரசாங்கத்துடன் இணைக்க இது ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கை. இது ஒருபோதும் B20 இந்திய மக்களை மேம்படுத்துவதற்காக அல்ல. செயலில் உள்ள இந்திய இளைஞர்களில் ஒரு பகுதியை வெல்வதற்கும், எதிர்ப்பைக் குறைப்பதற்கும் இது ஒரு அரசியல் சூழ்ச்சி. ஆண்டுதோறும் RM50,000 அல்லது RM100,000 க்கு விண்ணப்பிக்க நினைத்தால், NGOக்கள் அரசாங்கத்தை விமர்சிப்பதில் கவனமாக இருக்க வேண்டும்!

தற்போது “மடானி அரசு” இந்த MITRA நிதியை வழங்குகிறது. அதன் அரசியல் நோக்கம் மாறிவிட்டதாக நீங்கள் நம்புகிறீர்களா?

மேலும், MITRA நிதியால் நடத்தப்படும் சில திட்டங்கள் உண்மையில் பயனுள்ளவையாக இருந்தாலும், பல திட்டங்கள், அவற்றால் உதவப்படுவதாகக் கூறப்படும் “மக்களை” விட, அவற்றை நடத்தும் தன்னார்வ அமைப்புகளுக்கே அதிக நன்மையை அளிக்கின்றன.

 

இனப்பிரச்சினைகளால் வறுமை மேலும் தீவிரமாகிறது

மேலே நான் குறிப்பிட்டது போல, பி20 இந்தியர்களின் வறுமையின் முக்கிய காரணம் சமூக-பொருளாதார அடிப்படையிலேயே உள்ளது, இன அடிப்படையில் அல்ல. இது உண்மை தான், ஆனால் சிறிது விளக்கப்பட வேண்டியதாக உள்ளது. இன்னும் துல்லியமாகச் சொல்வதானால், பி20 இந்தியர்களின் வறுமைக்கு சுமார் 80% காரணம் சமூக-பொருளாதார காரணங்களும், மீதமுள்ள 20% காரணம் இன அடிப்படையிலான பாகுபாடுகளும் ஆகும்.

 உதாரணம்: பி20 இந்தியர்களில் குடியுரிமையில்லாமை (statelessness) அதிகமாக இருப்பது, அவர்களின் பொருளாதார பிரச்சினைகளை உருவாக்கும் அல்லது தீவிரப்படுத்தும் முக்கிய இன அடிப்படையிலான காரணங்களில் ஒன்று. (சபாவில் உள்ள சுலு இனத்தவரும் சில சிறுபான்மை குழுக்களையும் தவிர, இது மற்ற சமூகங்களைவிட அதிகம்.) மலேசியாவில் பிறந்த பெற்றோரின் பிள்ளைகளாக இருந்தும், ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை இல்லை. இதற்கு காரணம் பெரும்பாலும் பெற்றோரின் கவனக்குறைவு, அறியாமை, அக்கறையின்மை ஆகியவையாகும், ஆனால் அதன் விளைவுகள் மிகக் கடுமையானவை. அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. முறையான வேலை (formal sector) செய்ய முடியாது. சுகாதார சேவைகள் பெறுவதும் சிரமமாகிறது. அவர்களது பிள்ளைகளும் குடியுரிமையற்றவர்களாகி விடும் அபாயம் அதிகம். துரதிர்ஷ்டவசமாக, தேசிய பதிவுத்துறை (JPN) மிகக் கடுமையான நடைமுறைகளை பின்பற்றுவதால், தேவையான ஆவணங்களைப் பெறுவது அரிதாகிறது.

தீர்வு: குடியுரிமையற்றவர்களுக்கு உதவுவதற்காக, MITRA நிதியின் ஒரு பகுதியை பிறப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை தொடர்பான பிரச்சினைகளை கையாளும் செயற்பாட்டாளர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளை (NGO) பயிற்றுவிக்கவும் ஆதரிக்கவும் பயன்படுத்தலாம். அதேபோல DNA பரிசோதனைகளுக்கான செலவுகளை ஏற்றுக்கொள்ளவும், நீதித்துறை மறுஆய்வு (Judicial Review) வழக்குகள் தொடர்வதற்கு சட்ட உதவி அளிக்கவும் செய்யலாம்.

மற்றொரு இன அடிப்படையிலான பிரச்சினை என்னவெனில், பி20 இந்தியர்கள் அரசாங்கப் பணிகளில் சேர்வதில் சந்திக்கும் சிரமம். அரசாங்கப் பணிகளில் நியாயமான வாய்ப்பு அளித்தால், வேலைஇல்லாமை அல்லது குறைவான வேலை (underemployment) பிரச்சினையை முழுமையாகத் தீர்க்க முடியாது, ஏனெனில் அரசாங்க வேலைகள் நாட்டின் மொத்த வேலைவாய்ப்பில் சுமார் 10% மட்டுமே. ஆனால், இந்தியர்கள் தங்களின் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ற அளவு அரசாங்கப் பணிகளைப் பெற்றால் அது உதவியாக இருக்கும். உதாரணமாக பேராக் மாநிலத்தில் இந்தியர்களின் மக்கள் தொகை விகிதம் சுமார் 16% ஆக இருக்கிறது. எனவே, அரசாங்கப் பணிகளில் 16% ஆட்கள் இந்தியர்களாக இருக்க வேண்டும் என்று கோருவது நியாயமானதே.

இந்திய B20 வறுமையை இனம் மோசமாக்குவதற்கான மற்றொரு எடுத்துக்காட்டு, பூமிபுத்ரா மாணவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புப் பள்ளிகள், ஜூனியர் கல்லூரிகள், உதவித்தொகைகள் மற்றும் பிற உறுதிமொழி நடவடிக்கைத் திட்டங்கள் போன்ற கல்வித் திட்டங்களில் ஏழை இந்திய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களைச் சேர்க்க அரசாங்கம் தயக்கம் காட்டுவது.

வாய்ப்புகளை அபகரித்தல்

இருப்பினும், இன அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்ட அனைத்து உறுதியான நடவடிக்கைகளுக்கும் இருக்க வேண்டியது போல, B20 இந்தியர்கள் இந்தியர்களுக்கு வழங்கப்படும் அரசு வேலைகள் மற்றும் கல்வி வாய்ப்புகளில் குறைந்தது 20% பெறுவதை உறுதி செய்ய போதுமான கவனம் செலுத்தப்பட வேண்டும். பெரும்பாலும் நடப்பது என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட இனக்குழுவில் வறுமையின் அடிப்படையில் பெறப்பட்ட இன ஒதுக்கீடுகள், பெரும்பாலும் அந்த இனக்குழுவின் மிகவும் வசதியான உறுப்பினர்களால் அனுபவிக்கப்படுகின்றன. இந்தப் போக்கு இந்திய சமூகத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. பூமிபுத்ரா சமூகங்களும் இந்த சமூக நோயால் மோசமாகப் பாதிக்கப்படுகின்றன.  அரசாங்கத்தின் பல நிலைகளில் நடைபெறும் வேலை ஆட்பதிவு செயல்முறைகளை தொடர்ந்து கண்காணித்து, குறிப்பாக பி40 இந்தியர்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிக்கு MITRA நிதி ஒதுக்கப்படுவது சிறந்ததாக இருக்கும்.

 

நாம் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டாமா?

B20 இந்தியர்களின் நிலை குறித்து நாம் தீவிரமாகக் கவலைப்படுகிறோம் என்றால், B20 இனத்தவரின் வறுமை குறித்து அக்கறை கொண்ட பிற (இந்தியரல்லாத) ஆர்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து, நியாயமற்ற சமூக-பொருளாதார கட்டமைப்புகளை கூட்டாக நிவர்த்தி செய்ய வேண்டும், அல்லவா? ஏனெனில், இந்த அநியாயமான சமூக-பொருளாதார அமைப்புகள் பெரும்பாலும் மிகச் சக்திவாய்ந்த, சமூகத்தின் மேலே உள்ள 5% பேருக்கு மட்டுமே பலனளிக்கின்றன. எனவே, இந்த நாட்டில் உருவாகும் செல்வம் சற்றே சமமாகப் பகிரப்படும் வகையில், பொருளாதாரத்தை மறுசீரமைக்க தேவையான பன்முக இன மக்கள் சக்தியை உருவாக்க, மற்ற மலேசியர்களுடன் சேர்ந்து செயல்படுவது மிகவும் அவசியமாகிறது.

 

டாக்டர் ஜெயகுமார் தேவராஜ்

மலேசிய சோசலிசக் கட்சியின் தேசியத் தலைவர்

(12/9/2025)

 


மக்களின் பிரச்சனைகளை 100 ரிங்கிட் தீர்த்துவிடுமா?

“நாட்டிலுள்ள அடிதட்டு மக்களின் மனங்களைக் கவருவதற்கு 100 ரிங்கிட் போதும் என பிரதமர் அன்வார் தப்புக் கணக்கு போட்டுவிட்டார். ஏழைச் சமூகத்தின் ப...