Saturday, July 17, 2021

EO6 அவசர சட்டத்தின் 10-வது ஆண்டு நினைவுகூரல்



ஜூலை 2011- ஆம் ஆண்டில்  மலேசிய  சோசலிச கட்சியின்  (பிஎஸ்எம்) செயற்பாட்டாளர்கள் 6 பேரை 28 நாட்கள்  தடுத்து வைத்திருந்த சட்ட விவகாரம்தான்  EO6.   EO என்பது Emergency Ordinancபொது அமைதி மற்றும் குற்றவியல் தடுப்பு அவசர சட்டமாகும்.  9 ஜூலை 2011 அன்று கோலாலம்பூரில் பெர்சே அமைப்பு மாபெரும் பேரணியை ஏற்பாடு செய்திருந்தது. பெர்சே 2.0 அமைதி பேரணி என்ற அதற்கு நாடு தழுவிய நிலையில் மக்களின் ஆதரவும் திரட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதே காலக்கட்டத்தில் 13-வது பொது தேர்தலை முன்னிட்டு ஒரு புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு மக்களை ஒருங்கினைக்கும் பிரச்சாரத்தில் பி.எஸ்.எம் பரப்புரைக்காக  செயற்படுத்திய ஒரு வார்த்தைதான் “Udahlah tu, Bersaralah BN!”. நேர்மையான தேர்தலுக்காகவும் புதிய அரசாங்க மாற்றத்திற்காகவும் மக்களிடம்  பரப்புரையை  கொண்டு சேர்க்க பி.எஸ்.எம் தலைமைத்துவத்தில் அந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.  அதன் காரணமாக நடந்தேறிய கைது நடவடிக்கை நாட்டில் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பி.எஸ்.எம் அரசியல்  வரலாற்றில் இந்த நாள் மிக முக்கியமான சம்பவமாக கவனத்தில் கொள்வதால் அதை நினைவுக்கூறும் வகையில் பி.எஸ்.எம் சில இணைய நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. முன்னதாக  EO6 கைது நடவடிக்கையின் பின்னணியில் என்ன நடந்தது என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

பி.எஸ்.எம்  மேற்கொண்ட பிரச்சாரத்திற்காக மக்கள் அணிதிரட்டி, ஜொகூரிலிருந்து தலைநகரை நோக்கி ஒரு பேருந்தும், பேராக்கிலிருந்து பினாங்கை சந்தித்து தொடர்ந்து பெர்லிஸை நோக்கி மற்றுமொரு பேருந்தும் புறப்பட்டது.  

தொடக்கத்திலிருந்தே அதிகாரத்தில் உள்ளவர்களால் பி.எஸ்.எமின் இந்த பிரச்சாரமும், மக்களுக்கு விநியோகித்த துண்டுப்பிரசுரங்களும்  மிகுந்த தொந்தரவை கொடுத்தன. இதன் காரணத்தினால் போலீஸ் துறையின் பார்வை பி.எஸ்.எம் மீது இருந்ததோடு அதன் முன்னெடுப்புகளையும் கண்காணித்துக்கொண்டே இருந்தது.  செயற்பாடுகளை நிறுத்துவதற்கான காரியங்களையும் போலீஸ் மேற்கொள்ளவும் செய்தது.   பிரச்சாரத்திற்காக பயணம் மேற்கொண்ட இரண்டு பேருந்துகளை பல இடங்களில் நிறுத்தி விசாரனை மேற்கொள்ளப்பட்டன.   ஜொகூரிலிருந்து தலைநகரை நோக்கி வந்துக்கொண்டிருந்த பேருந்தை நேரங்காலம் பாராமல் பல இடங்களில் விசாரனை செய்து சிலமணி நேரங்களில் விடுவித்தார்கள். ஆனால், பினாங்கை நோக்கி சென்ற பேருந்தில் இருந்த தோழர்கள் 30 பேரும் தடுத்து வைக்கப்பட்டு மறுநாள் பினாங்கு நீதிமன்றத்தில்  நிறுத்தப்பட்டார்கள்.


அங்குதான் யாரும் எதிர்பார்க்காத விதமாக பி.எஸ்.எம் தோழர்கள் மீது வீண்பழி  சுமத்தப்பட்டது. அதாவது நேர்மையான தேர்தலுக்காக முன்னெடுத்த  போராட்டம் நாட்டின் மாமன்னருக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று திரித்து குற்றஞ்சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால்  ஆயுல் தண்டனை கிடைக்க வகைச் செய்யும் சட்டத்தின் கீழ் பேருந்தில் இருந்த 30 பேரும் 7 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டனர்.

அவர்களில் 6 பேர்  விசாரனைக்குப் பிறகு  ஜூலை 4-ஆம் தேதி காவலிலிருந்து விடுவிக்கப்பட்டனர். பின் அவர்கள்6 பேரையும்  அவசர சட்டம்  அதாவது  Emergency Ordinance – EO கீழ் வழக்கு பதிவு செய்து, புக்கிட் அமான் போலீஸ் அதிகாரிகள், அவர்களை  மீண்டும் கைது செய்து கோலாலம்பூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.  இந்த  Emergency Ordinance சட்டம்  இரண்டு ஆண்டுகளுக்கு நீதிமன்ற விசாரனை  மேற்கொள்ளாத வகையில் யாரையும் கைது செய்து 60 நாள் விசாரனைக்கு உட்படுத்த காவல்துறைக்கு அதிகாரம் கொடுப்பதோடு அவர்களை நாடு கடத்தவும் வகை செய்கிறது என்பது குறிப்பிடதக்கது. கிட்டதட்ட தேச நிந்தனை சட்டத்திற்கு இணையான ஒன்றுதான் இதுவும்.

(பினாங்கு தடுப்புக்காவலில் இருந்த மற்ற தோழர்கள்  பினாங்கு நீதிமன்ற விசாரனைக்குப் பிறகு நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டனர்.)

சுங்கை சிபுட் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர்  ஜெயகுமார்,  பி.எஸ்.எம் உதவித்தலைவராக இருந்த சரஸ்வதி, பிஎஸ்எம் மத்திய செயற்குழு உறுப்பினர்களான சூ சொன் கை, சுகுமாரன், சுங்கை சிபுட் வட்டார பி.எஸ்.எம் செயலாளர் லெட்சுமனன் மற்றும் பி.எஸ்.எம் இளைஞர் பிரிவைச் சேர்ந்த  ஆர். சரத்பாபு ஆகிய தோழர்கள்தான் இந்த  Emergency Ordinance  சட்டத்தின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.


பி.எஸ்.எம்  சோசலிச சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டு நேர்மையான முறையில் மக்களுக்காக போராடும் ஒரு கட்சி என அரசு தெரிந்து கொள்ள 35 நாட்கள்  பிடித்தது. உண்மையில் அனைவருக்குமே தெரியும்; மாமன்னருக்கு எதிராக  பி.எஸ்.எம் மீது விழுந்த குற்றச்சாட்டும், அதனைத் தொடர்ந்து 6 தோழர்கள் மீது சுமத்தப்பட்ட Emergency Ordinance அமைதி மற்றும் குற்றவியல் தடுப்பு அவசர சட்டமும்  அர்த்தமற்றது ஆதாரமற்றது என்று. காரணம் 1998-ஆம் ஆண்டிலிருந்து பி.எஸ்.எம் முன்னெடுத்த மக்கள்  பிரச்னைகளுக்கான போராட்டங்களை நாடு அறியும். தோட்ட மக்கள் பிரச்னைகள், நகர மக்களின் பிரச்னைகள் என, இன மத பேதம் இல்லாமல் களத்தில் நின்று போராடியிருக்கிறது மலேசிய சோசலிச கட்சி. 



எந்த ஒரு அசம்பாவிதத்தையும் பி.எஸ்.எம் தம் போராட்டங்களில் இதுவரை கொண்டிருக்கவில்லை. உண்மையில் பெர்சே 2.0 பேரணியை தடுக்கும்  சூழ்ச்சியில் தேசிய காவல்துறை பி.எஸ்.எம் மை கருவியாக பயன்படுத்த எண்ணினார்கள். ஆனால், அதில் அவர்கள் தோல்வியையே தழுவினார்கள். பல லட்சம் பேர் பெர்சே பேரணியில் கலந்துக்கொண்டு பேரணியை வெற்றி பெற செய்தார்கள். 


ஆனால், EO சட்டத்தின் கீழ் சிறையில் இருந்த  பி.எஸ்.எம் தோழர்கள் பெர்சே பேரணி முடிந்தும் கிட்டதட்ட ஒரு மாதங்கள் சிறையில் தண்டனையை அனுபவித்தார்கள். அந்த அநியாயத்தை  எதிர்த்து பி.எஸ்.எம் தோழர்கள்  அரசுக்கும் நீதிதுறைக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் பல போராட்டங்களையும் நெருக்குதலையும் தொடர்ந்து முன்னெடுத்துக்கொண்டே இருந்தனர். தினமும் போராடம் வெடித்தன.  உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலிருந்தும் பி.எஸ்.எம்-க்கு ஆதரவு குரல் எழுந்தது. பின்னர் போராட்டத்தின் அழுத்தம் தாங்க முடியாமல்  எந்த நிபந்தனையும் இல்லாமல் 29 ஜூலை 2011 அன்று சிறையில் இருந்த 6 தோழர்களும் விடுதலை செய்யப்பட்டனர். இந்தப் போராட்டத்தை நினைவுக்கூறும் வகையில் சில இணைய நிகழ்ச்சிகளை பி.எஸ்.எம் ஏற்பாடு செய்திருக்கிறது. அதன் விவரங்கள் பின்வருமாறு…

  • வெட்டிபேச்சு (இணைய கலந்துரையாடல்)
  • தேதி: 22/7/2021
  • நேரம்/இடம்: இரவு 8.30 மணிக்கு பி.எஸ்.எம் முகநூல் வழியாக
  •  
  • EO6 இணைய புகைப்படக்கண்காட்சி
  • தேதி:17/7/2021
  • இடம் : https://partisosialis.org/photo-gallery-10th-year-commemoration-of-the-detention-and-the-struggle-to-release-the-6-psm-activists-from-emergency-ordinance-2011-2021/ 

  • இணைய கருத்தரங்கு 
  • தேதி:29/7/2021
  • நேரம்/ இடம்: பி.எஸ்.எம் முகநூல் வழியாக 
செய்தியாளர்:  யோகி

No comments:

Post a Comment

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...