ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் (இடைத்தேர்தல்) மலேசிய சோசலிசக் கட்சியின் (PSM) வேட்பாளர் பவாணி KS, நேற்று (21/4/2025) ஆயேர் கூனிங் கிராமப்புற மருத்துவமனை முன் ஒரு சிறப்பு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அந்தக் சந்திப்பில் பொது சுகாதார அமைப்பு தொடர்பான பிரச்சினைகளை பவாணி எடுத்துரைத்தார்.
"பொது சுகாதார சேவைகள் மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் வந்தாலும், சாதாரண குடிமக்களுக்கு இது மிக முக்கியமான அடிப்படைத் தேவை என்பதால், நான் ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், பொது மக்கள் எளிமையாக பொது சுகாதாரத்தை அணுக உதவும் விஷயங்களைச் செய்வேன்" என்று பவாணி கே.எஸ் கூறினார்.
ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினராக பவாணி கே.எஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் செய்யவிருக்கும் மூன்று விஷயங்களைப் பட்டியலிட்டார்:
1. ரஹ்மா பண பங்களிப்பு (STR) மற்றும் ரஹ்மா அடிப்படை பங்களிப்பு (SARA) பெறுபவர்களுக்கு 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு சுகாதார பரிசோதனைகளை நடத்துவதற்காக மலேசிய சுகாதார அமைச்சகம் (MOH) ஏற்பாடு செய்த ஒரு திட்டமான PeKa B40 திட்டத்தை ஊக்குவித்தல். ஏனென்றால், இந்தத் திட்டத்தை அணுகத் தகுதியுடைய பலர் இன்னும் இதைப் பயன்படுத்தவில்லை. தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால், ஆயர் கூனிங் சட்டமன்ற பகுதியில் உள்ள கிராம மேம்பாடு மற்றும் பாதுகாப்புக் குழுவுடன் (JPKK) இணைந்து பணியாற்றுவேன். அங்குள்ள குடியிருப்பாளர்கள் சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்ளவும், நோய்கள் ஏதேனும் இருந்தால் ஆரம்ப நிலையிலேயே அடையாளம் காணவும், நோய் தொடர்பான எதிர்மறை விளைவுகள் அல்லது சிக்கல்கள் ஏற்படுவதற்கு முன்பே சிகிச்சை பெறவும் அது உதவும்.
2. SOCSO ஆல் ஏற்பாடு செய்யப்படும் இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் (SKSSR) இல்லத்தரசிகள் பங்கேற்க ஊக்குவிப்பேன். SKSSR என்பது இல்லத்தரசிகள் இயலாமைக்கு எதிராக பாதுகாப்பை வழங்கும் சமூக காப்பீடு ஆகும். இந்தத் திட்டத்தில் பதிவு செய்யும் ஒரு இல்லத்தரசிக்கு வருடத்திற்கு RM120 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காப்பீடு செய்யப்பட்ட ஒருவருக்கு விபத்து அல்லது இயலாமையை ஏற்படுத்தும் நோயால் பாதிக்கப்பட்டாலோ, SOCSO காப்பீடு செய்யப்பட்ட நபருக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்கும்.
3. புதிய தனியார் மருத்துவமனைகள் கட்டுவதற்கு தடை விதித்தல். தாம் சட்டமன்ற உறுப்பினராக ஆக தேர்ந்தெடுக்கப்பட்டால், எந்தவொரு தனியார் மருத்துவமனை கட்டுமானத்திற்கும் நில ஒப்புதல்களை வழங்குவதை நிறுத்துமாறு சட்டமன்றத்தில் முன்மொழிவேன். அரசு மருத்துவமனைகளில் இருந்து தனியார் மருத்துவமனைகளுக்கு சிறப்பு மருத்துவர்கள் இடம்பெயர்வதைக் குறைப்பதற்கும், பொது மருத்துவமனைகளில் மக்கள் சிறந்த சிகிச்சை பெறுவதை உறுதி செய்வதற்கும், புதிய தனியார் மருத்துவமனைகளின் கட்டுமானப் பணிகளை முடக்குவது முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
பொது சுகாதார அமைப்பைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் PSM எடுக்கும் முயற்சிகள், முன்னதாகவே PSM கட்சியின் முக்கிய நிகழ்ச்சி நிரலில் இடம் பிடித்திருக்கிறது என்றும் பவானி வலியுறுத்தினார்.
குறிப்பிட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் PSM தேசியத் தலைவரான டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ், தேசிய துணைத்தலைவர் அருள்செல்வன் மற்றும் PSM மத்திய குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
"ஆரம்ப நிலையிலேயே நோய்களைக் கண்டறிவது முக்கியம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக பலர், குறிப்பாக குறைந்த வருமானக் கொண்ட மக்கள், நோயறிதலைப் கண்டறிவதில் தாமதத்தை ஏற்படுத்துகின்றனர்," என்று டாக்டர் ஜெயக்குமார் கூறினார். "அரசு ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் நிதி ஒதுக்கீடு காரணமாக ஏற்படும் நெரிசல் காரணமாக, பொது மருத்துவமனைகளில் நீண்ட நேரம் காத்திருக்கும் பிரச்சனையை சாதாரண குடிமக்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இது சரியான நோயறிதலைப் பெறுவதில் தாமதத்தையும் ஏற்படுத்துகிறது."
"பெரும்பாலான குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில், கடுமையான நோயின் காரணமாக குடும்பத்தில் ஒருவருக்கு தீவிர சிகிச்சையில் இருக்கும்போது, அக்குடும்பம் இரண்டு வருமானம் ஈட்டும் நபர்களை இழக்கும், இதனால் அவர்களின் வாழ்க்கை நிலைமைகள் மேலும் மோசமடைகின்றன," என்று டாக்டர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தார். "எனவே, மக்கள் முன்கூட்டியே நோயறிதல் மற்றும் போதுமான சிகிச்சையைப் பெற பொது சுகாதார சேவைகளை மேம்படுத்துவது முக்கியம்" என்றார் அவர்.
No comments:
Post a Comment